தரையிறங்கும்போது வெடித்து சிதறிய விமானம் – பிரபல இசையமைப்பாளர், மனைவி, குழந்தை உள்பட 9 பேர் பலி

by Column Editor

லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான டொமினிகன் குடியரசு நாட்டில் இன்று நடைபெற்ற விமான விபத்தில் பிரபல இசையமைப்பாளர், அவரது மனைவி மற்றும் குழந்தை உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தனது இசையமைப்பு மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் ஜோஷி ஏஞ்சல் ஹர்னடின்ஸ். ‘ஃபாலோ லா மூவி’ என தனது ரசிகர்களால் அழைக்கப்படும் ஜோஷிக்கு உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இவருக்கு டிபி வொன் மெரி ஜிமென்ஸ் ஹர்சியா (31) என்ற மனைவியும் ஜேடன் (4) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், சண்டோ டொமினிகோவில் உள்ள இசபெல்லா சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜோஷி தனது மனைவி, குழந்தை மற்றும் நண்பர்கள் என மொத்தம் 9 பேர் தனி சொகுசு விமானம் மூலம் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லெண்டோ நகருக்கு புறப்பட்டு சென்றார்.

புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால், விமானத்தை மீண்டும் இசபெல்லா விமான நிலையத்திலேயே அவசரமாக விமானி தரையிறக்கினார். அவசர தரையிறக்கத்தின் போது விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. இதனையடுத்து விமானம் ஓடுதளத்தில் விழுந்து வெடித்து விபத்துக்குள்ளானது.

இந்த விமான விபத்தில் விமானம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்த விமான விபத்தில் இசையமைப்பாளர் ஜோஷி, அவரது மனைவி ஹர்சியா, மகன் ஜேடன் உள்பட விமானத்தில் பயணித்த 9 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் ஜோஷி ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Posts

Leave a Comment