சென்னையில் ஸ்மோக் பிஸ்கட்டுக்குத் தடை.! உணவுப்பாதுகாப்புத்துறை அதிரடி..!!

by Lifestyle Editor

சென்னையில் திரவ நைட்ரஜனை பயன்படுத்தி உடனடியாக உண்ணும் வகையில் தயாரிக்கப்படும், ஸ்மோக் பீடா, ஸ்மோக் பிஸ்கட், சமைத்த உணவு போன்றவற்றிற்கு தடை விதிக்கப்படுவதாக, மாநில உணவு பாதுகாப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து, அறிவிப்பு வெளியிட்டுள்ள, மாநில உணவு பாதுகாப்புத்துறை திரவ நைட்ரஜன் உணவுப் பொருட்களுக்கு முற்றிலும் தடை விதிப்பதாகவும், அதை மீறி அதை பயன்படுத்துவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், நைட்ரஜனை திரவமாகவும், வாயுவாகவும் உணவு பதப்படுத்த மற்றும் பேக்கிங் உள்ளிட்ட தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் அதற்கும் உணவுப் பாதுகாப்புத்துறையின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற தேவைகளை தாண்டி வேறு எதற்காகவும் நைட்ரஜனை வாயுவாகவோ அல்லது திரவமாகவோ முற்றிலும் பயன்படுத்த தடை விதிப்பதாக உணவுப் பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதையும் மீறி பயன்படுத்தினால், சட்டத்தின் பிரிவு எண் 55,56,58,59 மற்றும் 63,65,69 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிலும், உணவுப் பாதுகாப்புத்துறையின் உரிமம் பெற்றவர் இந்த தவறை இழைத்தால், அவரின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படுவதுடன், வணிக பணிகளுக்கும் தடை விதிக்கப்படும். அது மட்டும் இன்றி சுமார் ரூ. 2 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரம், குற்றம் இழைத்தவர் உணவுப் பாதுகாப்புத்துறையின் பதிவுச் சான்றிதழ் பெற்றவராக இருந்தால், அந்த சான்றிதழ் ரத்து செய்யப்படுவதுடன் வணிக செயல்பாடுகளுக்கும் தடை விதித்து அபராதமும் விதிக்கப்படும்.

உரிமமும், சான்றிதழும் இல்லாதவர் இதே குற்றத்தை செய்யும் பட்சத்தில், நுகர்வோர் பாதிக்கப்பட்டாலோ அல்லது உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டாலோ அவர் மீது 59, 63,65 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றவியல் வழக்குப் பதிவு செய்து தண்டனை வழங்கப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment