சென்செக்ஸ் 454 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.28 லட்சம் கோடி லாபம்..

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 454 புள்ளிகள் உயர்ந்தது.

பணவீக்கத்துக்கு ஏற்ப செயல்பட உள்ளதாக அமெரிக்க பெடரல் வங்கி தெரிவித்துள்ளது. அதாவது முன்கூட்டியே வட்டி விகிதத்தை உயர்த்துவோம் என்று அமெரிக்க பெடரல் வங்கி மறைமுகமாக தெரிவித்துள்ளது. இதனால் ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் ஆரம்பத்தில் எதிரொலித்தது. இருப்பினும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஐ.டி.சி. உள்பட மொத்தம் 14 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இண்டஸ்இந்த் வங்கி மற்றும் மாருதி உள்பட மொத்தம் 16 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,124 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,167 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 120 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.265.73 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.28 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 454.10 புள்ளிகள் உயர்ந்து 58,795.09 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 121.20 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,536.25 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment