சாலைகள், விமான நிலையம், ஹெலிபேட்… எல்லையில் சீனாவின் அசுர வளர்ச்சி

by Lankan Editor

சீனாவிடம் 500க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், 2030க்குள் இந்த எண்ணிக்க்ஐ 1,000க்கு மேல் உயரும் என்றும் பென்டகன் அறிக்கை கூறுகிறது.

2022ஆம் ஆண்டில் இந்தியாவுடனான எல்லைப் பதற்றத்திற்கு மத்தியில், அசல் கட்டுப்பாட்டு கோடு (LAC) பகுதியில் சீனா தனது ராணுவ பலம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்துள்ளது என அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

நிலத்தடி குடோன், புதிய சாலைகள், இரட்டை பயன்பாட்டுக்கான விமான நிலையம், பல ஹெலிபேடுகள் ஆகியவை சீனாவின் உள்கட்டமைப்பு முன்னேற்றத்தின் ஒரு பகுதியாகும் என பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

“மே 2020 தொடக்கத்தில் இருந்து, இந்தியா-சீனா எல்லையில் நீடித்த பதற்றங்கள் சீனாவின் வெஸ்டர்ன் தியேட்டர் கமாண்டின் கவனத்தைப் பெற்றன. தொடர்ந்து எல்லை வரையறை குறித்து இந்தியாவிற்கும் சீனாவுக்கு இடையே உள்ள மாறுபட்ட நிலைப்பாடுகள், பல மோதல்களுக்கும் எல்லையில் படைகளை நிறுத்துவதற்கும் வழிவகுத்துள்ளது” என்று பென்டகன் அறிக்கை கூறுகிறது.

20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்த கால்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பதிலளிக்கும் விதமாக சீனாவின் வெஸ்டர்ன் தியேட்டர் கமாண்ட் எல்லையில் பெரிய அளவிலான போக்குவரத்து வசதிகளை உருவாக்கியுள்ளது. இந்தக் உள்கட்டமைப்புப் பணிகள் இந்த ஆண்டு முழுவதும் நீடிக்கும் என்று அறிக்கை கூறுகிறது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பலகட்டப் பேச்சுவார்த்தைகளில் இரு தரப்பினரும் தங்கள் நிலைப்பாட்டில் சமரசம் செய்துகொள்ளாமல் உறுதியாக இருப்பதால் குறைந்தபட்ச முன்னேற்றம்கூட ஏற்படவில்லை என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அசல் கட்டுப்பாடு கோடு பகுதியில் சீனா ஏற்படுத்தியுள்ள உள்கட்டமைப்பு அம்சங்கள் பற்றி பட்டியலிட்டுள்ள பென்டகன் அறிக்கை, “2022ஆம் ஆண்டில், சீனா எல்லையில் இராணுவ உள்கட்டமைப்பைத் தொடர்ந்து மேம்படுத்தியது. டோக்லாம் அருகே நிலத்தடி சேமிப்பு குடோன்கள், புதிய சாலைகள் மற்றும் அண்டை நாடான பூட்டானில் சர்ச்சைக்குரிய புதிய கிராமங்கள், பாங்காங் ஏரியின் மீது இரண்டாவது பாலம், இரட்டை பயன்பாட்டுக்கு உரிய விமான நிலையம் மற்றும் பல ஹெலிபேடுகள் ஆகியவற்றை சீனா உருவாக்கியுள்ளது.”

முன்னதாக, இந்த ஆண்டு ஜூன் மாதம், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சீனாவுடன் ராணுவம் மற்றும் ராஜதந்திர மட்டங்களில் பிரச்சினைகளைத் தீர்க்க இந்தியா பேச்சுவார்த்தை நடத்திவருவதாகக் கூறியிருந்தார். இந்திய எல்லைகளின் புனிதத்தன்மையை மீறுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

சீனாவிடம் 500க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், 2030க்குள் இந்த எண்ணிக்க்ஐ 1,000க்கு மேல் உயரும் என்றும் பென்டகன் அறிக்கை கூறுகிறது. ஏற்கனவே உலகிலேயே மிகப்பெரியதாக இருக்கும் சீனக் கடற்படை மேலும் வளர்ந்து வருகிறது என்றும் பென்டகன் தெரிவிக்கிறது.

Related Posts

Leave a Comment