பங்குச் சந்தைகளில் தொடரும் ஏற்றம்… சென்செக்ஸ் 75 புள்ளிகள் அதிகரிப்பு

by Lifestyle Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 75 புள்ளிகள் உயர்ந்தது.

நிறுவனங்களின் கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகள், முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பஜாஜ் பைனான்ஸ் மற்றும் பஜாஜ் பின்சர்வ் உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், எச்.டி.எஃப்.சி. வங்கி மற்றும் எச்.டி.எஃப்.சி. உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,883 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,647 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 119 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.267.00 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.67 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 74.61 புள்ளிகள் உயர்ந்து 60,130.71 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 25.85 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,769.25 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment