பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி… சென்செக்ஸ் 709 புள்ளிகள் சரிவு..

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 709 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

அமெரிக்க பெடரல் வங்கி நாளை வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவை காட்டிலும் உயர்ந்தது, உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் 4வது சுற்று தடைகளை விதித்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், மகிந்திரா அண்ட் மகிந்திரா மற்றும் மாருதி உள்பட மொத்தம் 10 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டாடா ஸ்டீல் மற்றும் கோடக் மகிந்திரா வங்கி உள்பட மொத்தம் 20 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,341 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,046 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 101 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.251.62 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.2.64 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 709.17 புள்ளிகள் குறைந்து 55,776.85 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 208.30 புள்ளிகள் சரிவு கண்டு 16,663.00 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment