சென்செக்ஸ் 1,747 புள்ளிகள் வீழ்ச்சி…

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் கடும் வீழ்ச்சி கண்டது. சென்செக்ஸ் 1,747 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

ரஷ்யா-உக்ரைன் இடையிலான மோதல் போக்கு அதிகரித்துள்ளதால் சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வீழ்ச்சி, முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்வதில் தீவிரம் காட்டியது உள்ளிட்ட காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவன பங்கினை தவிர்த்து மற்ற 29 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 574 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,977 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 119 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.265.38 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.8.42 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,747.08 புள்ளிகள் குறைந்து 56,405.84 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 531.95 புள்ளிகள் சரிவு கண்டு 16,842.80 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment