சென்செக்ஸ் 765 புள்ளிகள் வீழ்ச்சி.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.48 லட்சம் கோடி இழப்பு..

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் 765 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் சிறிது நேரத்துக்கு பிறகு பங்கு வர்த்தகம் படிப்படியாக சரிவு கண்டது. ஓமைக்ரான் கொரோனா வைரஸ் இந்தியா உள்பட 25 நாடுகளில் பரவியுள்ளது என்ற செய்தி இந்திய பங்குச் சந்தைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இண்டஸ்இந்த் வங்கி மற்றும் எல் அண்டு டி உள்பட மொத்தம் 4 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பவர் கிரிட் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்பட மொத்தம் 26 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,801 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,453 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 143 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.261.09 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.48 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 764.83 புள்ளிகள் குறைந்து 57,696.46 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 204.95 புள்ளிகள் சரிவு கண்டு 17,196.70 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment