சென்செக்ஸ் 1,170 புள்ளிகள் வீழ்ச்சி.. முதலீட்டாளர்களுக்கு ரூ.8.11 லட்சம் கோடி நஷ்டம்..

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் வீழ்ச்சி கண்டது.. சென்செக்ஸ் 1,170 புள்ளிகள் குறைந்தது.

ஐரோப்பிய மத்திய வங்கி முன்கூட்டியே வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது, ஆஸ்திரியா லாக்டவுன் அமல்படுத்தியது மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தது. பெரும்பாலான ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்த போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் பலத்த அடி வாங்கியது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பார்தி ஏர்டெல், ஏசியன் பெயிண்ட்ஸ், பவர் கிரிட் மற்றும் இண்டஸ்இந்த் வங்கி ஆகிய 4 நிறுவன பங்குகளை தவிர மற்ற 26 நிறுவன பங்குகளின் விலை வீழ்ச்சி கண்டது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 904 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,499 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 165 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.261.11 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.8.11 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,170.12 புள்ளிகள் குறைந்து 58,465.89 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 348.25 புள்ளிகள் சரிவு கண்டு 17,416.55 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment