வடகொரியாவின் அறிவிப்பால் தென் கொரிய எல்லையில் பதற்றம்!

by Lifestyle Editor

தென் கொரியாவின் எல்லைக்கு அதிக துருப்புக்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை நகர்த்துவதாக வட கொரியா அறிவித்ததைத்தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவியுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு கூட்டு இராணுவ உடன்படிக்கையில் இருந்து தென்கொரியா விலகியதைத்தொடர்ந்து வடகொரியாவின் இந்த அறிவிப்பு வெளியானது.

இராணுவ உளவு செயற்கைக்கோளான மல்லிகியோங்-1ஐ வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் செலுத்தியதாக வடகொரியா கூறியதை அடுத்து, நேற்று (புதன்கிழi) ஒப்பந்தத்தின் சில பகுதிகளிலிருந்து தென்கொரியா விலகியது.

இதனைத்தொடர்ந்து, ‘வட-தெற்கு இராணுவ ஒப்பந்தத்தின்படி நிறுத்தப்பட்ட அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நாங்கள் உடனடியாக மீட்டெடுப்போம் அதாவவது, தரை, கடல் மற்றும் வான் உட்பட அனைத்து துறைகளிலும் இராணுவ பதற்றம் மற்றும் மோதலைத் தடுக்க எடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை நாங்கள் திரும்பப் பெறுவோம். மேலும் இராணுவ எல்லைக் கோடு வழியாக பிராந்தியத்தில் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதப்படைகள் மற்றும் புதிய வகை இராணுவ தளவாடங்களை நிலைநிறுத்துவோம்’ என அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் கே.சி.என்.ஏ. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், தென் கொரியா ‘தற்போதைய சூழ்நிலையை கட்டுப்படுத்த முடியாத கட்டத்திற்கு தள்ளியுள்ள பொறுப்பற்ற மற்றும் தீவிரமான அரசியல் மற்றும் இராணுவ ஆத்திரமூட்டல்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டும்’ என்றும் வட கொரியா கூறியது.

இதனிடையே, சியோலில் உள்ள எவ்வா வொமண்ஸ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வுகளின் பேராசிரியரான லீஃப்-எரிக் ஈஸ்லி, இருதரப்பு ஒப்பந்தம் கைவிடப்பட்டதன் விளைவாக அபாயங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என விபரித்துள்ளார்.

தீபகற்பத்தில் பதற்றத்தை குறைக்கும் மற்றும் இரு நாடுகளுக்கு இடையே நம்பிக்கையை வளர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் மற்றும் தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி மூன் ஜே-இன் இடையே 2018ஆம் ஆண்டு உச்சிமாநாட்டில் விரிவான இராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment