இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி!

by Lifestyle Editor

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலாவதாக டெஸ்ட் தொடர் நடைபெற்ற நிலையில், அதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி மழை காரணமாக டிரா ஆனது. இதனால் இந்திய அணி 1-க்கு 0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. டெஸ்ட் தொடரை அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி அந்நாட்டின் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் கடந்த ஜூலை மாதம் 27ம் தேதி நடைபெற்ற நிலையில், இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் காரணமாக இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்திய அணி பேட்டிங்கில் சிறப்பான தொடக்கம் கொடுத்தாலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்திய அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக இஷான் கிஷான் 55 ரன்களும், சுப்மன் கில் 34 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 36.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 1க்கு 1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

Related Posts

Leave a Comment