எதிர்காலத்தில் ஜொலிக்க இருக்கும் 5 இந்திய இளம்வீரர்கள் – ரிக்கி பாண்டிங் கணிப்பு

by Column Editor

ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் வாரியம் என்னை அந்தப் பதவிக்கு அணுகியதாக ரிக்கி பாண்டிக் கூறியுள்ளார்.

புதுடெல்லி:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்த அவர் 2 முறை ஒருநாள் போட்டி உலக கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.

46 வயதான ரிக்கி பாண்டிங் ஐ.பி.எல். போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-

ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்காக இந்திய அணியை இப்போதே தயார் படுத்த வேண்டும். தற்போதுள்ள அணியில் சிறிய மாற்றம் செய்ய வேண்டும்.

20 ஓவர் போட்டியில் விளையாட கூடிய திறமையான வீரர்கள் இந்தியாவில் அதிகரித்து வருகிறார்கள். இதனால் சீனியர் வீரர்கள் தங்களது இடங்களை தக்க வைத்து கொள்வது கடினமானது. ஹர்திக் பாண்ட்யா உடல் தகுதியுடன் இல்லாததால் பந்து வீசவில்லை. அவரது இடத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.

தற்போது உள்ள 5 இளம் வீரர்கள் எதிர்காலத்தில் ஜொலிப்பார்கள். பிரித்வி ஷா, வெங்கடேஷ் அய்யர், ருதுராஜ் கெய்க்வாட், படிக்கல், ஜெய்ஷ்வால் ஆகியோர் எதிர்கால இந்திய அணியில் சூப்பர் ஸ்டார் வீரர்களாக இருப்பார்கள். ரோகித் சர்மா, விராட் கோலி இல்லாத காலத்தில் அவர்கள் முத்திரை பதிக்கலாம்.

வெங்கடேஷ் அய்யரின் சிறப்பான ஆட்டத்துக்கு கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் முக்கிய பங்கு வகித்துள்ளார்.ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் வாரியம் என்னை அந்தப் பதவிக்கு அணுகியது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் என்னை ஏற்கனவே பயிற்சியாளர் பதவிக்கு அணுகி இருந்தது.

பயிற்சியாளர் பதவியில் 300 நாட்கள் வீரர்களுடன் செலவிட வேண்டும். அவ்வளவு நாட்கள் என்னால் இருக்க முடியாது என்பதால் பயிற்சியாளர் பதவியை நிராகரித்து விட்டேன்.

ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பதவியை ஏற்றுக்கொண்டது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. குடும்பத்தை தியாகம் செய்து பார்க்க வேண்டிய வேலை அதுவாகும். இதனால்தான் அவர் பொறுப்பேற்றது வியப்பை அளித்தது. அவரது குடும்ப விவரம் பற்றி எனக்கு தெரியாது. அவருக்கு சிறிய வயதில் குழந்தைகள் இருப்பதாக நினைக்கிறேன். ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணிக்கு தொடர்ந்து பயிற்சியாளராக இருப்பேன்.

இவ்வாறு ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment