ஆவின் நிறுவனத்தை வாங்குகிறதா ரிலையன்ஸ் ..

by Lifestyle Editor

ஆவின் நிறுவனத்தை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது;

ஏனெனில் ஆவின் பாலகங்கள் நடத்தும் பால் முகவர்களுக்கு நெய் உள்ளிட்ட பால் பொருட்களை ஆவின் நிர்வாகம் சரியாக விநியோகம் செய்யாத நிலையில் நிர்ணயிக்கப்பட்ட விற்பனை விலையை விட ரிலையன்ஸ் மார்ட் கடைகளில் MRP விலையில் இருந்து 30.00ரூபாய் வரை குறைந்த விலைக்கு தட்டுப்பாடின்றி, தாராளமாக கிடைக்கும் வகையில் வழங்கி வருகிறது.

இந்த நிலையில் கடந்த 5ம் தேதி பால் கொள்முதல் விலை உயர்வு காரணமாக நிறைகொழுப்பு பாலான ஆரஞ்சு நிற பிரிமியம் பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு தவிர்த்து பொது வணிகத்திற்கான விற்பனை விலையை லிட்டருக்கு 12.00 ரூபாய் உயர்த்தி லிட்டர் 60.00 ரூபாய் என அறிவித்ததோடு மாதாந்திர அட்டைதாரர்களுக்கான விலையில் எந்த மாற்றமும் இன்றி பழைய விலையான லிட்டர் 46.00 ரூபாய்க்கே விநியோகம் செய்யப்படும் என அறிவித்தது.

இந்த நிலையில் ஒரு லிட்டர் 60.00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட வேண்டிய ஆவின் நிறைகொழுப்பு பாலான ஆரஞ்சு நிற பிரிமியம் பால் பாக்கெட் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ரிலையன்ஸ் மார்ட் கடைகளில் தினசரி காலை வகையிலேயே ஒரு லிட்டர் 48.00 ரூபாய்க்கு (அரை லிட்டர் 24.00) விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நேற்று முன்தினம் (14.11.2022), நேற்று (15.11.2022) மாலையும் மற்றும் இன்று (16.11.2022) காலையிலும் களத்தில் இறங்கி ஆய்வு செய்ததில் அது உண்மை என தெரிய வந்தது.

மாதாந்திர அட்டைதாரர்களை தவிர்த்து லிட்டர் 60.00ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட வேண்டிய நிலையில் காலையில் இருந்து மாலை வரை ஒரு லிட்டர் 48.00 ரூபாய்க்கு ரிலையன்ஸ் மார்ட்டில் விற்பனை செய்யப்பட்டு வருவதும், பிற்பகலில் மறுநாள் தேதியிட்ட பால் பாக்கெட்டுகள் விற்பனையாவதும் கடும் அதிர்ச்சியளிப்பதோடு தமிழகம் முழுவதும் பால் முகவர்களோடு ஆவின் நிர்வாகம் கொண்டிருக்கும் உறவை முறித்துக் கொண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தோடு ஒட்டி உறவாடும் பணியை தமிழக அரசு சத்தமின்றி செய்து வருகிறதோ..? என ஏற்கனவே கூறிய “ஆவினை அபகரிக்க பார்க்கும் ரிலையன்ஸ்” என்கிற அந்த சந்தேகத்தை இந்த நிகழ்வுகள் மேலும் வலுப்படுத்துவதாகவே இருக்கிறது.

ஏற்கனவே பால் முகவர்கள் மற்றும் சில்லரை வணிகர்களுக்கான லாபத் தொகை (கமிஷன்) அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில் இருந்து லிட்டருக்கு 2.00 ரூபாய் வழங்கப்படும் போது ஒரு லிட்டர் 60.00 ரூபாய் எனில் விற்பனை கமிஷன் தொகையை கழித்தால் 58.00 ரூபாய் தான் வரும் போது அதை விட குறைவாக லிட்டருக்கு 12.00 ரூபாய் அதாவது பழைய விற்பனை விலையான 48.00 ரூபாய்க்கே ரிலையன்ஸ் விற்பனை செய்வது என்பது எப்படி சாத்தியமாகும்..? அப்படியானால் பால் முகவர்களையும், சில்லறை வணிகர்களையும் அழிக்க ஆவினும், ரிலையன்ஸ் நிர்வாகமும் சதி செய்கிறதோ..? என்கிற சந்தேகமும் கூடவே எழுகிறது.

எனவே தமிழகம் முழுவதும் பால் முகவர்களுக்கு ஒரு விற்பனை விலையும், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒரு விலையும் என வழங்குவதையும், நெய் உள்ளிட்ட பால் பொருட்கள் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மட்டும் தட்டுப்பாடின்றி வழங்கி விட்டு ஆவினின் முதுகெலும்பாக இருக்கும் பால் முகவர்களை வஞ்சிப்பதையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. அத்துடன் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்படும் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அல்லது விரைவில் எங்களது சங்கத்தின் பொதுக்குழு கூடி ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை தமிழகம் முழுவதும் புறக்கணிப்பது தொடர்பாக முடிவெடுக்கும் என்பதை தமிழக அரசுக்கும், ஆவின் நிர்வாகத்திற்கும் தெரிவித்துக் கொள்கிறோம்” என கூறியுள்ளார்.

இவ்வாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment