பாக்கியாவை மோசமாக ஏமாற்றும் கோபி.. விவாகரத்து வாங்க போவது உறுதி!

by Column Editor

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவை பொய் சொல்லி ஏமாற்றி கோர்டுக்கு அழைத்து செல்கிறார் கோபி.

பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது. கோபி மாட்டுவார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் தற்போது கோபி விவாகரத்து வாங்க போவது உறுதியாகிவிட்டது. இதை உறுதி செய்யும் விதமாக விஜய் டெலிவிஷன் முக்கியமான புரமோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பப்படும் ஹிட் சீரியல்களில் பாக்கியலட்சுமியும் ஒன்று. சீரியல் தற்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் பயணித்துக் கொண்டிருக்கிறது. இல்லத்தரசிகளின் கதை என்ற ஒன்லைனில் தொடங்கிய சீரியல் தற்போது பிரைம் டைமில் ஒளிப்பரப்பாகும் மெகா ஹிட் சீரியல்கள் லிஸ்டில் இணைந்துள்ளது. அதற்கு மிக முக்கியமான காரணம், சீரியலின் தற்போதைய கதைக்களம் மற்றும் நடிகர்களின் பங்கு. மனைவியை கொஞ்சம் கூட மதிக்காத கணவர் கோபி, ரோலில் நடிகர் சதீஷ் பட்டையை கிளப்பி வருகிறார். ஒருபக்கம் கணவர் ஏமாற்றுவது கூட தெரியாத அப்பாவி இல்லத்தரசி ரோலில் பாக்கியாவாக சுஜித்ரா. இவர்களின் நடிப்பு தான் இந்த சீரியலை தூண் போல் தாங்கி நிற்கிறது.

குடும்பத்திற்கு தெரியாமல் தனது பழைய காதலியுடன் மிகவும் நெருங்கி பழகி வந்த கோபி, இப்போது ராதிகாவை திருமணம் செய்து கொள்ள போகிறார். ஆனால் அதற்கு உண்மையை சொல்லி பாக்கியாவிடம் விவாகரத்து வாங்க தைரியம் இல்லாத கோபி கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுகிறார். அதில் பலியாவது வழக்கம் போல் பாக்கியா தான். தற்போது சீரியலில் கோபிக்கும் ராதிகாவுக்கும் சட்டப்படி திருமணம் நடக்க வேண்டுமென்றால் அதற்கு இருவரும் விவாகரத்து வாங்க வேண்டும் என வக்கீல் சொல்லி விடுகிறார். ஏற்கெனவே ராதிகாவுக்கு டைவர்ஸ் கிடைத்து விட்டது. இந்நிலையில் கோபி பாக்கியாவிடம் பொய் சொல்லி டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து வாங்கி விட்டார். இந்த விஷயம் வீட்டில் இருக்கும் யாருக்கும் தெரியாது.

இந்த நேரத்தில் விவாகரத்து வழக்கின் விசாரணைக்கு கோபி – பாக்கியாவும் இருவரும் ஒன்றாக வர வேண்டும் என வக்கீல் சொல்லிவிடுகிறார், இது சம்மந்தமான பேப்பர் வீட்டுக்கு வருகிறது. அதையும் ஏமாற்றி யாரும் படிக்காத மாதிரி கோபி செய்து விடுகிறார். ஆனால் எழிலுக்கு சந்தேகம் வந்து விட்டது. இப்படி இருக்கையில் பாக்கியாவை பொய் சொல்லி ஏமாற்றி கோர்டுக்கு அழைத்து செல்கிறார் கோபி. அப்பாவி பாக்கியா என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் எல்லாவற்றுக்கும் சம்மதம் சொல்கிறார்.

இதுக் குறித்த புரமோ தான் தற்போது வெளியாகியுள்ளது. புரமோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் கோபியை திட்டி தீர்க்கின்றனர். அதே போல் கோபிக்கு பாக்கியாவிடம் இருந்து விவாகரத்து கிடைத்துவிடும் என்ற அப்டேட்டும் வேகமாக இணையத்தில் பரவி வருகிறது.

Related Posts

Leave a Comment