ஏறி இறங்கிய பங்கு வர்த்தகம்…சென்செக்ஸ் 145 புள்ளிகள் குறைந்தது…

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 145 புள்ளிகள் குறைந்தது.

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் பதற்றம் தணிந்தது அதேசமயம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வாக இருந்தது. இது போன்ற காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் ஏற்ற இறக்கம் நிலவியது. இறுதியில் பங்கு வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், எச்.டி.எப்.சி. மற்றும் பார்தி ஏர்டெல் உள்பட மொத்தம் 8 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், என்.டி.பி.சி. மற்றும் எஸ்.பி.ஐ. உள்பட மொத்தம் 22 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,022 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,331 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 100 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.262.02 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.21 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 145.37 புள்ளிகள் குறைந்து 57,996.68 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 30.25 புள்ளிகள் சரிவு கண்டு 17,322.20 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment