கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு சீரியலில் நடிக்க வரும் மெட்டி ஒலி சீரியல் நடிகை!

by Column Editor

நாடக உலகில் புகழ்பெற்று விளங்கிய பம்பாய் ஞானத்திற்கு அடுத்ததாக சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

90களில் சன் டிவி சீரியல்களுக்கு இல்லத்தரசிகள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த குடும்பமே ரசிகர்களாக இருந்தனர். அதற்கு கோலங்கள், மெட்டி ஒலி, சித்தி போன்ற சீரியல்கள் முக்கிய காரணமாக அமைந்தன. அப்படிப்பட்ட புகழ்பெற்ற சீரியல்களில் நடித்த நடிகை ஒருவர் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கம்பேக் கொடுக்க உள்ளதாக வெளியான தகவல்கள் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

90களில் டிவி சீரியல்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பம்பாய் ஞானம். மேடை நாடகம், தொலைக்காட்சி, திரைப்படங்கள் என பிசியாக வலம் வந்தவர். 1989 ஆம் ஆண்டு ‘மகாலட்சுமி லேடீஸ் டிராமா குரூப்’ என்ற நாடக குழுவை தொடங்கி நடித்து வந்தார். அந்த காலத்தில் முன்னணி நடிகர்கள் கூட நாடகங்களில் நடிப்பார்கள், அப்படி அவர்கள் நடித்தால் எவ்வளவு கூட்டம் வருமோ, அதே அளவிற்கு ‘பம்பாய் ஞானம்’ டிராமா குழுவின் நாடகம் என்றாலும் கூட்டம் களைகட்டுமாம். விசு, பூர்ணம் விஸ்வநாதன், டெல்லி கணேஷ், மெளலி என ஆண்கள் நாடக மேடைகளை ஆண்டு கொண்டிருந்த காலத்தில், தனது நடிப்பால் தனியொரு பெண்ணாக சமூக நாடங்களில் முத்திரை பதித்தவர்.

நாடக உலகில் புகழ்பெற்று விளங்கிய பம்பாய் ஞானத்திற்கு அடுத்ததாக சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, பிரேமி, பல்லாங்குழி, சஹானா, மெட்டி ஒலி, கோலங்கள், சித்தி, அண்னாமலை, சிதம்பர ரகசியம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

அதேபோல் ஆகா, ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே, நள தமயந்தி, ஒரு நாள் ஒரு கனவு, வெயில், அழகிய தமிழ்மகன், ஜிகர்தண்டா போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நாடகம், சீரியல், திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி 2005ம் ஆண்டில் இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கியது. அதுமட்டுமின்றி நாடகங்களில் நடித்த காலங்களில் நாடக சூடாமணி, நாடக பத்மம், நாடக ரத்னம், வாணிகலா சுதாகரா என பல சிறப்பு பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒரு காலக்கட்டத்திற்கு பிறகு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையை விட்டு விலகிய பம்பாய் ஞானம் , மேடை நாடகங்களை தயாரித்து வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் சன் டி.வி.யின் புதிய சீரியல் மூலமாக ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.

புகழ்பெற்ற கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வன் இயக்கத்தில் “எதிர்நீச்சல்” என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. வரும் பிப்ரவரி 7ம் தேதி முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் பம்பாய் ஞானமும் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10 வருடங்களுக்கு மேலாக எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்த பம்பாய் ஞானம் மீண்டும் சன் டிவி சீரியலில் நடிக்க உள்ளார் என்ற செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Posts

Leave a Comment