அமெரிக்காவில் மீண்டும் ஓர் பயங்கர தீ விபத்து.. 9 குழந்தைகள் உள்பட 19 பேர் பலி…

by Column Editor

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர்.

நியூயார்க் நகரில் 19 தலங்களைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 3 வது மாடியில் இருந்த வீடு ஒன்றில் பற்றிய தீ, மளமளவென குடியிருப்புக் கட்டடத்தில் உள்ள அனைத்துத் தளங்களுக்கும் பரவியது. இந்த தீ விபத்தில் குடியிருப்பில் இருந்த நூற்றுக்கணக்கானோர் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இந்த பயங்கர தீ விபத்தில் 9 குழந்தைகள் உள்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலர் தீயில் கருகியும், தீ விபத்தினால் எற்பட்ட புகை காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மேலும் 60 க்கும் மேற்பட்டோர் கயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.. சுமார் 200 க்கும் அதிகமாக மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இது மிகவும் மோசமான தீ விபத்து என்றும், குடியிருப்பில் சிக்கிய பலருக்கும் அதிகப்படியான மூச்சுத்திணறல் ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

முதல் கட்ட விசாரணையில் மின்சார ஹீட்டரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த புதன்கிழமை அன்று பிலடெல்ஃபியாவில் உள்ள குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போது ஒரு வாரத்திற்குள்ளாக மற்றுமொரு பயங்கர தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

Related Posts

Leave a Comment