சென்செக்ஸ் 460 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.42 லட்சம் கோடி லாபம்

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 460 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. ஜி.எஸ்.டி. கவுன்சில் ஜவுளிகளுக்கான ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்தும் முடிவை ஒத்திவைத்தது என்ற தகவல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வர்த்தகத்தின் இடையே உயர்ந்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டைட்டன் மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் உள்பட மொத்தம் 26 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், என்.டி.பி.சி. மற்றும் டெக் மகிந்திரா உள்பட மொத்தம் 4 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,438 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 949 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 93 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.265.95 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.42 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 459.50 புள்ளிகள் உயர்ந்து 58,253.82 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 150.10 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,354.05 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment