லண்டனில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மரபுரிமை மாதம் பிரகடனம்

by Column Editor

பிரித்தானியாவின் தலைநகரான லண்டன் பெருநகர பிராந்தியத்தில் தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் தமிழ் மரபுரிமை மாத பிரகடனத்திற்கு லண்டன் அஸெம்பிளி எனப்படும் பெருநகர அவை ஏகமனதாக இன்று அங்கீகாரம் வழங்கி வராற்று முக்கியத்துவத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரித்தானியாவின் NHSல் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்னணி சுகாதார வல்லுநர்கள் என மதிப்பிடப்பட்ட 15,000 தமிழர்கள் பணிபுரிகின்றனர். தவிரவும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஆசிரியர்களாகவும் ஆசிரியர் உதவியாளர்களாகவும் பிரித்தானிய பாடசாலைகளில் பணியாற்றுகின்றனர்.

பிரித்தானியாவின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் கட்டமைப்பிற்கு தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் லண்டன் மற்றும் லண்டன் பெருநகர மற்றும் நகராட்சி பிராந்தியங்களில் தமிழ் பாரம்பரிய மாதத்தை உறுதி செய்ய அழைப்பு விடுத்துள்ளதோடு, பொங்கல் (அறுவடை திருவிழா) போன்ற கொண்டாட்டங்களை குறிப்பிட்டு, லண்டன் முழுவதுமாக வாழும் மிகவும் மதிப்புமிக்க தமிழ் சமூகத்தை ஆதரிக்கப்பதாக இன்று லண்டன் மநாகர சபையில் ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

லண்டன் பெருநகர அவையின் கென்சவேட்டிவ் கட்சிஉறுப்பினர்களால் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட இந்தபிரேரணைக்கு அவையின் ஆளும், எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக ஆதரவு வழங்கியுள்ளனர். இந்தப் பிரேரணை மூலம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வருடா வருடம் ஜனவரி மாதத்தில் லண்டன் பெருநகர பிராந்தியத்தில் தமிழ் மரபுரிமை மாதம் கடைப்பிடிக்கும் சாத்தியங்கள் உருவாகியுள்ளன.

லண்டன் பெருநகர அவையின கென்சவேட்டிவ் கட்சி உறுப்பினர் நிக்கோலஸ் ரோஜர்ஸ் ஏஎம், என்பவரால் இன்று பிற்பகல் இந்தபிரேரணை முன்மொழியப்பட்டு அதன் பின்னர் இது விவாதத்துக்கு விடப்பட்டிருந்தது.

இந்த விவாதத்தில் அனைத்து உறுப்பினர்களும் பிரேரணைக்கான ஆதரவினைத் தெரிவித்த பின்னர், ஜனவரி மாதத்தை தமிழ் மரபுரிமை மாதமாக Tamil Heritage Month ஆக பிரகடனப்படுத்தும் பிரேரனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் எதிர்வரும் நாட்களில் லண்டன் பெருநகர பிராந்தியத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் இந்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையிலான பேச்சுக்களும் செயற் திட்டங்களும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்தப் பிரேரனையை முன்மொழிந்து கருத்து வெளியிட்ட நிக்கோலஸ் ரோஜர்ஸ் ஏஎம், “தமிழ் பாரம்பரிய மாதம் லண்டன் தமிழ் சமூகத்தின் வரலாற்றையும், நமது நகரத்திற்கு அவர்கள் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்பையும் கொண்டாடும் ஒரு வாய்ப்பாகும். இரண்டாம் உலகப் போரில் அரச விமானப்படையில் பணியாற்றிய தமிழர்கள் முதல் தமிழ் விஞ்ஞானிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வரை கொண்டாடுவதற்கு நிறைய வரலாற்று அம்சங்கள் உள்ளன. இன்று நம் நாட்டிற்கு கொரோனாவை எதிர்த்துப் போராடுவதிலும் அவர்களின் பாரிய பங்களிப்பு உதவுகிறது.

“அடுத்த ஆண்டு ஜனவரியில் இங்கிலாந்தின் இரண்டாவது தமிழ் பாரம்பரிய மாதத்திற்கு முன்னதாக தமிழ் சமூகத்தின் மகத்தான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் லண்டன் சட்டமன்றம் இந்த பிரேரணையை ஏற்றுக்கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

“சுமார் கால் மில்லியன் தமிழர்கள் இங்கிலாந்தில் வாழ்கின்றனர், பலர் லண்டனில் வசிக்கின்றனர். மிகவும் விரும்பப்படும் இந்த சமூகத்தைக் கொண்டாட, லண்டன் மேயர் மற்றும் லண்டன் பரோஸ் இந்த ஒரு மாத கால நிகழ்வைக் குறிக்க வேண்டும் என்பதோடு இது லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்ட கொண்டாட்டமாக மாற உதவ வேண்டும்.”

பிரேரணையின் முழு உரை:

“இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா மற்றும் பிற இடங்களில் இருந்து வந்த லண்டனின் தமிழ் சமூகம், எங்கள் நகரத்தின் வாழ்க்கையில் வலுவான பங்களிப்பைச் செய்கிறது.

NHS இங்கிலாந்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்னணி சுகாதார வல்லுநர்கள் என மதிப்பிடப்பட்ட 15,000 தமிழர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் உதவியாளர்களாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் எங்கள் பாடசாலைகளில் பணியாற்றுகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட வயது வந்தோருக்கான சமூகப் பாதுகாப்பு வசதிகள் லண்டன் மற்றும் அதைச் சுற்றியுள்ள தமிழர்களால் இயக்கப்படுகின்றன, நமது சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சிலரைக் அவை கவனித்து வருகின்றன.

இங்கிலாந்தின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் கட்டமைப்பிற்கு தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர்; இரண்டாம் உலகப் போரின் போது ராயல் ஏர் ஃபோர்ஸில் பணியாற்றியதில் இருந்து அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசியில் பணிபுரியும் தமிழ் விஞ்ஞானிகள் வரை இந்தப் பாரிய பங்களிப்பு தொடர்கிறது.

வெளிநாடுகளில் வாழும் இங்கிலாந்தில் உள்ள தமிழர்களின் குடும்பங்கள் மற்றும் நண்பர்களின் நல்வாழ்வை ஆழமாக பாதிக்கும், துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகத்தின் பின்னணியில் இந்த நம்பமுடியாத பங்களிப்பு தொடர்கிறது.

தமிழ் சமூகம் நமது நகரத்திற்கு ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்பிற்காக லண்டன் பேரவை நன்றி தெரிவிக்கிறது. அவர்கள் செய்யும் பணிக்கு நாங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜனவரி மாதம் தமிழ் பாரம்பரிய மாதத்தை குறிக்கிறது என்றும், பொங்கல் – அறுவடை திருவிழா – ஜனவரி 14 ஆம் தேதி தொடங்குகிறது என்றும் சட்டசபை குறிப்பிடுகிறது. லண்டன் மேயர் மற்றும் லண்டன் பெருநகரங்களில் இந்த நிகழ்வுகள் கொண்டாடப்படுவதையும், எங்கள் மிகவும் மதிப்புமிக்க தமிழ் சமூகம் நகரம் முழுவதும் ஆதரிக்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment