2 டோஸ் போட்டாலும் ஓமைக்ரானிடம் தப்ப முடியாது

by Lifestyle Editor

ஒமைக்ரான் எனப்படும் புதிய வகை உருமாற்றமடைந்த கொரோனாவால் உலக நாடுகள் கடும் அச்சத்தில் உள்ளன. கடந்த வாரம் தென் ஆப்பிரிக்க நாட்டில் இந்த வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் புதிய வகை கொரோனா பரவிவருகிறது. ஆயிரக்கணக்கானோர் ஒமைக்ராவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வகை கொரோனா அதிவேகமாகப் பரவக் கூடியது.

அபாயம் நிறைந்ததாகவும் கூறப்படுகிறது. தடுப்பூசிகளையே எதிர்க்கும் ஆற்றல் படைத்தது என சொல்லப்படுகிறது. இதனால் அச்சமடைந்த பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இஸ்ரேல், சிங்கப்பூர், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் தென் ஆப்பிரிக்கா உடனான விமான சேவைகளை ரத்துசெய்துள்ளன. இந்தியாவும் விமான நிலையங்களில் பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. அந்நாடுகளிலிருந்து வருபவர்களுக்கான கட்டுப்பாடுகளையும் அதிகரித்துள்ளது.

பிரிட்டனில் 2 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிரிட்டனில் அடுத்த வாரம் முதல் கடைகளிலும் போக்குவரத்திலும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்நாட்டுக்குள் யார் நுழைந்தாலும் அவர்கள் கட்டாயம் பிசிஆர் டெஸ்ட் எடுத்திருக்க வேண்டும். அதேபோல ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் என பல்வேறு கட்டுபாடுகள் விதிகப்பட்டுள்ளன.’

இச்சூழலில் நேற்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் குறித்த முழு விவரம் நமக்கு தெரியாது. நமது ஆராய்ச்சியாளர்கள் ஒமைக்ரான் தொடர்பாக ஆய்வுகளை முடுக்கிவிட்டுள்ளனர். அதன் தன்மை, பரவல் வேகம் குறித்து முழுமையாக தெரிந்துவிடும். 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் ஒமைக்ரான் பரவலாம் என சொல்லப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ” என்றார்

Related Posts

Leave a Comment