அயோத்தி ராமர் கோயிலுக்கு வெளிநாட்டினரும் நன்கொடை அளிக்க அனுமதி!

by Lankan Editor

வெளிநாட்டு நன்கொடைகள் டெல்லியில் 11 சன்சாத் மார்க்கில் அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கி (SBI) கிளையில் மட்டுமே வெளிநாட்டு நன்கொடைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

அயோத்தி ராமர் கோயிலைக் கட்டும் அறக்கட்டளைக்கு வெளிநாட்டினர் அளிக்கும் நன்கொடையைப் பெறுவதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை உள்நாட்டினர் மட்டுமே பல்வேறு வகையில் நன்கொடை செலுத்திவந்த நிலையில், இப்போது அயல்நாடுகளில் இருந்தும் அயோத்தி ராமர் கோயில் கட்ட நன்கொடைகள் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்காக வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் (FCRA) கீழ் வெளிநாட்டு நன்கொடைகளை ஏற்பதற்கான உரிமம் பெற்றுள்ளதாக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா எனப்படும் அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

“இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் FCRA பிரிவானது, ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு வெளிநாட்டு மூலங்களிலிருந்து தன்னார்வ பங்களிப்பை ஏற்க FCRA உரிமத்தை ஒதுக்கீடு செய்துள்ளது” என்று அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார்.

வெளிநாட்டு நன்கொடைகள் டெல்லியில் 11 சன்சாத் மார்க்கில் அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கி (SBI) கிளையில் மட்டுமே வெளிநாட்டு நன்கொடைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அறக்கட்டளை சார்பில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் FCRA உரிமத்திற்கு விண்ணப்பிக்கப்பட்டது எனவும் சம்பத் ராய் குறிப்பிட்டார்.

ஏற்கெனவே அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளைக்கு இந்தியா முழுவதும் இருந்து ரூ.3,500 கோடி நன்கொடை கிடைத்துள்ளது.

அயோத்தியில் 450 ஆண்டுகள் பழமையான பாபர் மசூதி 1992 இல் இடிக்கப்பட்ட தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் 2019ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில், அயோத்தியில் முஸ்லிம்களின் பிரத்யேக உரிமைக்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஒரு அறக்கட்டளைக்கு அமைத்து 67.3 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் அனுமதி வழங்கப்பட்டது. கோயில் கட்டுமானக் குழு கோயிலுக்கு அருகில் பொதுப் பயன்பாட்டு வசதிகளை ஏற்படுத்த மேலும் 71 ஏக்கர் நிலத்தையும் கையகப்படுத்தியுள்ளது.

இந்தியாவிற்கு வெளியே இருந்து நன்கொடைகளைப் பெற FCRA இன் கீழ் பதிவு செய்வது கட்டாயமாகும். FCRA உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் லாபநோக்கற்ற அமைப்புகள் கலாச்சாரம், பொருளாதாரம், கல்வி, மதம் அல்லது சமூக திட்டங்கள் போன்ற ஒரு வகையின் கீழ் தங்கள் செயல்பாடுகளை வரையறுக்க வேண்டும்.

Related Posts

Leave a Comment