இந்தியாவை சீண்டிப் பார்க்கும் சீனா… சர்ச்சையை கிளப்பும் சீன வெளியுறவு அமைச்சகம் ..

by Lifestyle Editor

அருணாசல பிரதேசத்தை சீனா தங்களின் இறையான்மைக்கு உட்பட்ட பகுதி என கூறிவருகிறது. இந்நிலையில் சீன வெளியுறவு அமைச்சகம் அம்மாநிலத்தின் 11 பெயர்களை மாற்றி மீண்டும் சர்ச்சை எழுப்பி உள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசம் தங்களுக்கு சொந்தமானது என்று சீனா நீண்டகாலத்திற்கு முன்பிருந்து உரிமை கொண்டாடி வருகிறது. மேலும் அதனை தெற்கு திபெத் என்று கூறி வருகிறது.

இந்த நிலையில், சீனா அருணாசல பிரதேச மாநிலத்தில் இருக்கும் 11 இடங்களின் பெயர்களை மாற்றி உள்ளது. அருணாசல பிரதேசத்துக்கு ஜாங்னான் என்று பெயர் சூட்டி உள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவை சீண்டிப் பார்க்கும் சீனாவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இந்தியாவின் வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி வெளியிட்ட செய்தியில், இன்றளவும் அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக உள்ளது. இந்தியாவின் ஒரு பகுதியாக இருப்பதுடன் எப்போதும் இதே நிலை தொடரும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சீனாவின் இதுபோன்ற அறிக்கைகளை நாம் முன்பே பார்த்துள்ளோம். இதுபோன்ற முயற்சியில் சீனா ஈடுபடுவது இது ஒன்றும் முதன்முறையல்ல. இதனை முழுமையாகவும் தெளிவாகவும் நாங்கள் மறுக்கிறோம். இந்தியாவில் இருந்து பறிக்கப்பட முடியாத பகுதியாக அருணாசல பிரதேசம் நீடிக்கும். புதிதாக பெயர்களை சூட்டும் முயற்சியால், இந்த உண்மையை மாற்ற முடியாது என தெரிவித்துள்ளார்.

சீனா கடந்த 2017-ஆம் ஆண்டும் அருணாசல பிரதேசத்தில் உள்ள 6 பகுதிகளுக்கு இவ்வாறு பெயர் சூட்டியிருந்தது. கடந்த 2021-ஆம் வருடமும் இதேபோல், அருணாசல பிரதேசத்தில் மேலும் 15 இடங்களுக்கு சீன பெயர்களை சீனா அதிகாரபூர்வமாக வெளியிட்டது.

அருணாசல பிரதேசத்துக்கு உட்பட்ட எட்டு குடியிருப்பு பகுதிகள், 4 மலைகள், 2 ஆறுகள் மற்றும் ஒரு மலைக்கணவாய் ஆகியவற்றுக்கு சீன, திபெத் மற்றும் ரோமன் எழுத்துகளில் சீனா பெயர் சூட்டியது. திபெத்தின் தெற்கு பகுதி தங்களின் உள்ளார்ந்த பகுதி என்றும் கூறியது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜி-20 தொடர்பான கூட்டங்கள் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் ஜி-20 அமைப்பின் உறுப்பு நாடுகள் பங்கேற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த மார்ச் மாத இறுதியில் அருணாசல பிரதேச தலைநகர் இடாநகரில் ஜி-20 கூட்டம் ஒன்று நடந்தது. இதில் சீனா பங்கேற்கவில்லை. சீன அரசு சார்பில் இதற்கான காரணமும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான மாவோ நிங் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறும்போது, ஜாங்னான் (அருணாசல பிரதேசம்) சீனாவின் எல்லைக்கு உட்பட்ட பகுதி என்று கூறியுள்ளார்.

மேலும் மாநில கவுன்சிலின் புவியியல் பெயர்களுக்கான நிர்வாகத்தினரின் நிபந்தனைக்கு உட்பட்டு, சீன அரசின் தொடர்புடைய செயல் அதிகாரிகள் ஜாங்னானின் சில பகுதிகளுக்கு பெயர்களை தரவரிசைப்படுத்தி இருக்கின்றனர். அது சீனாவின் இறையாண்மை உரிமைகளுக்கு உட்பட்டே செயல்படுத்தப்பட்டது என்று கூறியுள்ளார்.

இதனால், மேலும் ஒரு சர்ச்சையை சீனா மீண்டும் கிளப்பி உள்ளது. பெயரிடப்பட்ட 11 இடங்களில் 2 குடியிருப்பு பகுதிகள், 5 மலை சிகரங்கள், 2 நில பகுதிகள் மற்றும் 2 ஆறுகள் ஆகியவை அடங்கும். சீனாவால் உரிமை கோரப்படும் பகுதி எப்போதும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியாகும்.

இந்த இடங்களுக்கு சீன பெயர்களை சூட்டுவதன் மூலம் சீனா அவற்றை தங்களுடையதாக உரிமை கொண்டாட நினைக்கிறது. சீன, திபெத்திய மற்றும் பின்யின் ஆகிய மொழிகளில் சீனாவின் சிவில் விவகார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை இந்த பெயர்களை வெளியிட்டுள்ளது.

இந்திய பகுதியில் உரிமை கோரும் சீனாவின் முயற்சிகளுக்கு அமெரிக்கா நேற்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. அருணாசல பிரதேச பகுதிகளில் மறுபெயர்களை சூட்டுவதற்கும் அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

Related Posts

Leave a Comment