சென்செக்ஸ் 361 புள்ளிகள் வீழ்ச்சி..

by Lifestyle Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 361 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

உலகளாவிய வங்கி நெருக்கடி, ஆசிய பங்குச் சந்தைகளில் சரிவு, அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது, அதானி குழும நிறுவன பங்குகளின் அழுத்தம் போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் ஐ.டி.சி. உள்பட மொத்தம் 7 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பஜாஜ் பின்சர்வ் மற்றும் பஜாஜ் பைனான்ஸ் உள்பட மொத்தம் 23 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,155 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,468 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 129 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.255.51 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.19 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 360.95 புள்ளிகள் குறைந்து 57,628.95 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 111.65 புள்ளிகள் சரிவு கண்டு 16,988.40 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment