பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்பு.. சென்செக்ஸ் 847 புள்ளிகள் உயர்வு..

by Lifestyle Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 847 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியது. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி உயர்வு நடவடிக்கையை நிதானமாக மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு, டி.சி.எஸ். உள்பட நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டைட்டன், பஜாஜ் பின்சர்வ் மற்றும் மாருதி சுசுகி இந்தியா ஆகிய 3 நிறுவன பங்குகளை தவிர்த்து மற்ற 27 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,047 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,582 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 170 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.282.93 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று ஒட்டு மொத்த அளவில் ரூ.3.15 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 846.94 புள்ளிகள் உயர்ந்து 60,747.31 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 241.75 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,101.20 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment