தொடர்ந்து 3வது நாளாக பங்குச் சந்தைகளில் ஏற்றம் … சென்செக்ஸ் 762 புள்ளிகள் உயர்வு ..

by Lifestyle Editor

இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 762 புள்ளிகள் உயர்ந்தது.

அமெரிக்க பெடரல் வங்கி நிதிக் கொள்கை கூட்ட உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் வட்டி உயர்வு நடவடிக்கையை மெதுவாக்க ஒப்புக்கொண்டதாக வெளியான தகவல் உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகள் இன்று வர்த்தகத்தின் இடையே புதிய உச்சத்தை தொட்டன. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டாடா ஸ்டீல், பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ் மற்றும் கோடக் மகிந்திரா வங்கி ஆகிய 4 நிறுவன பங்குகளை தவிர்த்து மற்ற 26 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,938 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,564 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 133 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.283.71 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று ஒட்டு மொத்த அளவில் ரூ.2.35 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 762.10 புள்ளிகள் உயர்ந்து 62,272.68 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 216.85 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,484.10 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment