JEE மெயின் தேர்வு தேதிகளில் மாற்றம்: புதிய அட்டவணையை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை..

by Column Editor

ஜேஇஇ மெயின்ஸ் 2022 தேர்வுக்கான தேதிகளில் திருத்தம் செய்யப்பட்டு புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஜேஇஇ மெயின் தேர்வு என்பது IIT, NIT உள்ளிட்ட உயர்க்கல்வி நிறுவனங்களில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பி.பிளான் போன்ற படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வாகும். தேசிய தேர்வு முகமை (NTA)நடத்தும் இந்தத் தேர்வில் JEE மெயின் தாள் 1, தாள் 2 என 2 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவோர் JEE Advanced 2022 இல் கலந்துகொள்ளவும் தகுதி பெறுவார்கள்.

இந்த தேர்வில் நாடு முழுவதும் ஆங்கிலத்தில் வினாத்தாள் இடம்பெற்றிருக்கும். அதேபோல் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப தமிழ், ஹிந்தி, அஸ்ஸாமிஸ், பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் உருது ஆகிய மாநில மொழிகளில் கேள்விகள் இடம்பெற்றிருக்கும். அதன்படி 2022 – 23 ஆம் கல்வியாண்டில் JEE மெயின்ஸ் தேர்வு ஏப்ரல் மாதம் 16, 17, 18, 19, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் பொதுத்தேர்வு தேதிகளுடன் இந்த தேதிகள் முரண்படுவதால் JEE மெயின்ஸ் தேர்வு தேதிகளை மாற்றியமைக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி தேதிகள் மாற்றியமைத்து புதிய தேர்வு அட்டவனையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, ஏப்ரல் மாதம் 21, 24, 25, 29 மற்றும் மே 1, 4 ஆகிய தேதிகளில்JEE மெயின்ஸ் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அட்டவணையை அதிகாரப்பூர்வ இணையதளமான jeemain.nta.nic.in ல் தெரிந்துகொள்ளலாம்.

தேர்வு எழுத விருப்பமுள்ளவர்கள் https://jeemain.nta.nic.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். முதல்கட்டத் தேர்வுக்கு மார்ச் 31 வரையிலும், இரண்டாம் கட்டத் தேர்வுக்கு மே 3 வரையிலும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment