ரஷ்ய தாக்குதலில் சிதைந்த இந்திய பங்குச் சந்தைகள்.. சென்செக்ஸ் 2,702 புள்ளிகள் வீழ்ச்சி

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் கடும் வீழ்ச்சி கண்டது. சென்செக்ஸ் 2,702 புள்ளிகள் சரிந்தது.

ரஷ்யா இன்று உக்ரைன் மீது ராணுவ தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதலை தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது, முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மரண அடி வாங்கியது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளின் விலையும் குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 234 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 3,158 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 86 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.242.31 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.13.37 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,702.15 புள்ளிகள் குறைந்து 54,529.91 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 815.30 புள்ளிகள் சரிவு கண்டு 16,247.95 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment