சென்செக்ஸ் 1,024 புள்ளிகள் வீழ்ச்சி…

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 1,024 புள்ளிகள் சரிந்தது.

பல நாடுகளில் ரிசர்வ் வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த தொடங்கியுள்ளன. அமெரிக்க பெடரல் வங்கி மார்ச் மாதத்துக்குள் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு மார்ச் காலாண்டில் நம் நாட்டில் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் உச்ச வரம்பான 6 சதவீதத்தை காட்டிலும் அதிகரிக்கும் என தெரிகிறது.மேலும் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பவர் கிரிட் மற்றும் என்.டி.பி.சி. உள்பட 5 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் எல் அண்ட் டி உள்பட மொத்தம் 25 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,405 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,103 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 142 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.264.82 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.2.90 கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,023.63 புள்ளிகள் குறைந்து 57,621.19 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 302.70 புள்ளிகள் சரிவு கண்டு 17,213.60 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment