சென்செக்ஸ் 581 புள்ளிகள் வீழ்ச்சி…

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 581 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

அமெரிக்காவில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்த அமெரிக்க பெடரல் வங்கியின் கருத்து, வட்டி விகிதத்தை உயர்த்துவது தொடர்பான சிக்னல் மற்றும் மார்ச் மாதத்தில் பத்திரங்களை வாங்குவது நிறுத்தப்படும் என்பதற்கான உறுதிப்படுத்துதல் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஆக்சிஸ் வங்கி மற்றும் எஸ்.பி.ஐ. உள்பட மொத்தம் 9 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், எச்.சி.எல். டெக்னாலஜிஸ் மற்றும் டெக்மகிந்திரா உள்பட மொத்தம் 21 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,478 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,886 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 91 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.260.11 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.2.62 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 581.21 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 57,276.94 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 167.80 புள்ளிகள் சரிவு கண்டு 17,110.15 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment