நரை முடி போக ஆயுர்வேத மருத்துவர் சொல்லும் ஹேர் டைஆண்களும் போடலாம்!

by Column Editor

முடி நரைக்க தொடங்கும் போது ஹேர் டை பயன்படுத்துவது வழக்கம். பக்கவிளைவில்லாத ஹேர் டை ரெசிபியாக ஆயுர்வேதம் சொல்வதை இப்போது பார்க்கலாம்.

ஹேர் டை பயன்பாடு அதிகரித்துவருகிறது. அதே நேரம் இயற்கையான பொருள்களை கொண்டு முடியின் நிறத்த மெருகேற்ற விரும்புபவர்களும் உண்டு. பக்கவிளைவில்லாத இயற்கையான பொருள்களை கொண்டு நரைமுடியை கருமையாக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் வழிமுறைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

ஆயுர்வேதத்தில் ஹேர் டை:

தேங்காயெண்ணெயுடன் பீர்க்கங்காய்:

பீர்க்கங்காயை பொடியாக நறுக்கி வைக்கவும். தேங்காயெண்ணெயில் பீர்க்கங்காயை கருப்பாகும் வரை (சுமார் 4 மணி நேரம் ) வைத்து வேகவிடவும். இவை ஆறியதும் நன்றாக மசாஜ் செய்து விடவும். உச்சந்தலையில் முடி நுனி வரை இதை செய்யவும். 45 நிமிடங்களுக்கு பிறகு கூந்தலை அலசி எடுக்கவும். இதனால் நரைமுடி மறையக்கூடும்.

கரிசலாங்கண்ணி:

கரிசலாங்கண்ணி கீரையை உள்ளுக்கு எடுப்பது போன்று வெளிப்புறப்பூச்சுக்கும் பயன்படுத்தலாம். கரிசலாங்கண்ணி பவுடர் கடைகளில் கிடைக்கும். ஒரு வாணலியில் கரிசலாங்கண்ணி பவுடர் மற்றும் 2 டீஸ்பூன் தேங்காயெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும்.

இளஞ்சூட்டில் இருக்கும் போது உச்சந்தலை முதல் முடி நுனிவரை தடவி விடவும். ஒரு மணி நேரம் வரை கூந்தலில் அப்படியே ஊறவைத்து கூந்தலை அலசி எடுக்கவும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதை செய்து வரலாம்.

கருப்பு மிளகு:

கருப்பு மிளகு ஃப்ரெஷ்ஷாக இருக்கட்டும் அதை 1 டீஸ்பூன் அளவு எடுத்து நன்றாக மசிக்கவும். எலுமிச்சை சாற்றை 1 டீஸ்பூன் அளவு எடுத்து அரை கப் தயிரில் கலக்கவும். இந்த கலவையை கூந்தலில் மசாஜ் செய்து 1 மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். பிறகு கூந்தலை அலசி எடுக்கவும் வாரத்தில் மூன்று முறை இதை செய்யவும். இது முடியின் நிறத்தை அடர்த்தியாக காட்டும்.

ப்ளாக் டீ உடன் மருதாணி:

ஒரு கப் பிளாக் டீ அல்லது காஃபியில் மருதாணி பொடியை தேவையான அளவு கலந்து தயிர் சேர்க்கவும். இதை அப்படியே மூடி ஆறுமணி நேரம் வரை அப்படியே வைக்கவும். பிறகு 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை கலந்து கூந்தலில் தடவவும். கூந்தல் நன்றாக அடர்ந்த கருமை நிறம் பெறுவதற்கு 1 முதல் 3 மணி நேரம் வரை அப்படியே வைத்திருந்து பிறகு கூந்தலை அலசி எடுக்கவும்.

செம்பருத்தி இலை:

செம்பருத்தி இலைகள் மற்றும் பூக்களை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலை அதை மசித்து சுத்தமான கூந்தலில் தடவவும். பிறகு தலைமுடியை வெற்று நீரில் நன்றாக கழுவி விடவும். செம்பருத்திப்பூ பொடியை மருதாணியில் கலந்தும் பயன்படுத்தலாம்.

மேற்கண்ட இந்த ஹேர் டை ஆரம்பகால இளநரையை பெரிதும் போக்கும். இதனோடு உணவு முறை, சரியான வாழ்க்கை முறை, முறையான பராமரிப்பு என எல்லாம் சேர்ந்து முடி மேலும் நரைப்பதை தடுக்கும். முழுமையாக வெள்ளை நிறத்தில் ஆன முடியாக இருந்தால், வயதான பிறகு வரக்கூடியவற்றை எப்போதும் சரி செய்ய முடியாது. அதை தீவிரமாகாமல் கட்டுப்படுத்தலாம் அவ்வளவே பெண்களை போன்று ஆண்களும் இந்த ஹேர் டை போடலாம்.

Related Posts

Leave a Comment