சென்செக்ஸ் 32 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.28 ஆயிரம் கோடி லாபம்..

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 32 புள்ளிகள் உயர்ந்தது.

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று இந்திய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் இந்த ஏற்றம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை, அதன் பிறகு பங்கு வர்த்தகத்தில் ஏற்றஇறக்கம் நிலவியது. இறுதியில் பங்கு வர்த்தகம் சிறிய உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பவர் கிரிட் மற்றும் ஐ.டி.சி. உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டாடா ஸ்டீல் மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,305 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,114 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 157 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.270.43 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.28 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 32.02 புள்ளிகள் உயர்ந்து 60,718.71 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 6.70 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,109.45 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment