பாகிஸ்தானை பந்தாடிய ஆஸ்திரேலியா

by Column Editor

பாகிஸ்தானை வீழ்த்தி வெறித்தனமாக இறுதி போட்டிக்குள் கால் பதித்துள்ள ஆஸ்திரேலிய அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியான இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியஅணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ரிஸ்வான் 67 ரன்களும், ஃப்கர் ஜமான் 55* ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, அந்த அணியின் துவக்க வீரரும் கேப்டனுமான ஆரோன் பின்ச் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து மிகப்பெரும் ஏமாற்றம் கொடுத்தார்.

இதன்பின் வந்த மிட்செல் மார்ஸ் (28), ஸ்டீவ் ஸ்மித் (5), கிளன் மேக்ஸ்வெல் (7) ஆகியோரும் ஆஸ்திரேலிய அணிக்கு ஏமாற்றம் கொடுத்தனர்.

நீண்ட நேரம் தாக்குபிடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னரும் 49 ரன்கள் எடுத்திருந்த போது தனது கவனக்குறைவால் வெளியேறினார்.

முக்கிய வீரர்களின் விக்கெட்டை அடுத்தடுத்து கைப்பற்றிவிட்டதால் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி எளிதாக வெற்றி பெறும் என கருதப்பட்டது, ஆனால் டேவிட் வார்னர் விக்கெட்டை இழந்த பிறகு ஜோடி சேர்ந்த ஸ்டோய்னிஸ் – மேத்யூ வேட் கூட்டணி யாரும் எதிர்பாராத சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு கடைசி 2 ஓவரில் 22 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

முதல் மூன்று ஓவர்களை மிக சிறப்பாக வீசி ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பயம் காட்டிய ஷாகின் அப்ரிடி, போட்டியின் 19வது ஓவரை வீசினார்,ஷாகின் அப்ரிடியின் பந்துவீச்சில் ஆஸ்திரேலிய வீரர்கள் விக்கெட்டை இழக்காமல் இருந்தாலே போதும் என்றே அனைத்து ஆஸ்திரேலிய ரசிகர்களும் நினைத்திருப்பார்கள்

ஆனால் பயமே இல்லாத ஆட்டத்தை வெளிப்படுத்திய மேத்யூ வேட், ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசி 19வது ஓவரிலேயே போட்டியை முடித்து கொடுத்துள்ளார்.

இதன் மூலம் இந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.

இந்தநிலையில், இந்த போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு சமூக வலைதளங்களில், வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

குறிப்பாக 17 பந்துகளில் 41 ரன்கள் குவித்த மேத்யூ வேட்டிற்கும், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த டேவிட் வார்னர், ஸ்டோய்னிஸ் போன்ற வீரர்களுக்கும் அதிகமான பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Related Posts

Leave a Comment