கொத்தமல்லி செடியை வீட்டிலேயே வளர்க்க டிப்ஸ்…

by Lifestyle Editor

‘தானியா’ என்றழைக்கப்படும் கொத்தமல்லி நமது சமையலறையில் முக்கிய பொருளாகும். சுவையையும், நறுமணத்தையும் தரும் கொத்தமல்லியில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளும் உள்ளது. கொத்தமல்லி இலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் கரோட்டினாய்டுகள் அதிக அளவில் உள்ளன. கொத்தமல்லியை கொதிக்க வைத்த நீரை அருந்தி வந்தால் உடல் எடை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் முடியும்.

நாம் கடைகளில் வாங்கி பயன்படுத்தி வரும் கொத்தமல்லி இலைகளை வீட்டிலேயே வளர்க்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? முதன் முதலாக கொத்தமல்லி வளர்க்க நினைப்பவர்கள் வளர்ந்த செடியில் இருந்து ஆரோக்கியமான தண்டுகளை வெட்டி மணலில் நட்டு வளர்க்கலாம்.

நீங்கள் இதனை சரியான இடத்தில் வைப்பது மிகவும் அவசியமானது. ஏனெனில் அதிக அளவு சூரிய ஒளி படுவதால் கொத்தமல்லி இலைகள் கருக வாய்ப்பு உள்ளது. கொத்தமல்லி வளர அதிக சூரிய ஒளி தேவையில்லை, ஏனெனில் அது வளரும் இலைகளை கருமையாக்கி சேதப்படுத்தும். எனவே குறைந்த அளவு வெயில் , குளிர்ச்சியாகவும், நிழலாகவும் இருக்கும் இடத்தில் வைத்தால் போதுமானது.

நீங்கள் பயன்படுத்தும் மணல் தரமானதாக இருக்க வேண்டும். மணல் கரிமப் பொருட்கள் நிறைந்ததாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கொத்தமல்லியை நடவு செய்வதற்கு முன் இயற்கை உரம் கலந்து பயன்படுத்தவும்.

நீங்கள் தண்டுகளை நடவு செய்வது மட்டுமின்றி, கொத்தமல்லி விதைகளை பயன்படுத்தியும் இலைகளை வளர்க்கலாம். இதற்கு கொத்தமல்லி விதைகளை சரியான இடத்தில் விதைப்பது மிகவும் முக்கியம். அவற்றை நேரடியாக தரையில் அல்லது கொள்கலன்களில் 5-7 அங்குல ஆழத்தில் விதைத்து, அவற்றை மண்ணால் லேசாக மூடவும். பின்னர் தண்ணீரை லேசாக தெளித்து விட வேண்டும். முளைக்கும் வரை மண்ணை ஈரமாக வைத்திருங்கள்.

விதைகளுக்கு இடையில் போதுமான இடைவெளி இருக்க வேண்டும். அப்போது தான் இலைகள் செழித்து வளரும். விதைகள் அல்லது நாற்றுகள் என எப்படி வளர்த்தாலும் 6 முதல் 8 அங்குல இடைவெளியில் வைக்கவும்.

கொத்தமல்லி வளரும் கட்டத்தில் மண்ணை முழுவதும் ஈரமாக வைத்திருப்பது முக்கியம். தொடர்ந்து தண்ணீர் ஊற்றுவதற்கு பதில் லேசாக அவ்வப்போது தெளித்து விடுவது, ஒரு துணியில் ஈரம் செய்து மணலை மூடி விடுவது போன்றவற்றை செய்யலாம்.

இலைகள் வளர்ந்த பின்னர் கூடுதல் ஊட்டச்சத்துக்காக அரிசி கழுவிய தண்ணீர் போன்றவற்றை ஊற்றலாம். ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு இப்படி செய்தால் கொத்தமல்லி இலைகள் நன்கு புதராக வளர்ந்து, மென்மையான வாசனையைத் தரும்.

கொத்தமல்லி இலைகள் அதிக வெப்பநிலையில் கடுமையான சூரிய ஒளியால் வாடி சேதமடையலாம். எனவே மதியம் சூரிய வெளிச்சம் அதிகமாக இருக்கும் போது செடியை பருத்தி துணியால் மூடி வைக்கவும்.

Related Posts

Leave a Comment