தண்ணீர் பாட்டிலில் மணி பிளாண்ட் வளர்க்க டிப்ஸ்..

by Lifestyle Editor

நம்மில் பலரும் வீட்டில் செடி வளர்க்க ஆசைப்படுவோம். ஆனால் அதை பராமரிக்க சிரமமாக இருக்குமே என நினைத்து அந்த ஆசையை அப்படியே கைவிட்டுவிடுவோம். ஆனால் மணி பிளாண்ட்டை மிகவும் எளிதாக வீடுகளில் வளர்க்கலாம். இதற்கு குறைவான இடமும், குறைவான தண்ணீரும், குறைவான சூரி ஒளி மட்டும் இருந்தால் போதும். இதனால் வீட்டின் உள்ளேயே தண்ணீர் பாட்டில் பயன்படுத்தியும் கூட இந்த மணி பிளாண்ட்டை வளர்க்க முடியும். தண்ணீர் பாட்டிலில் மணி பிளாண்ட்டை எப்படி வளர்ப்பது என்பதற்கான டிப்ஸை இப்போது பார்ப்போம்.

சரியான பாட்டிலை தேர்வு செய்ய வேண்டும் ? அகலமான வாய்ப்பகுதியுள்ள சுத்தமான கண்ணாடி பாட்டிலை தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான் இதன் கணுக்கள் நன்கு வளரும். மேலும் இதன் வேர் வரை சூரிய ஒளி கிடைப்பதற்கும் நன்கு செழிப்பாக வளர்வதற்கும் இதுபோன்ற பாட்டில்களே பயனுள்ளதாக இருக்கும்.

நன்கு சுத்தப்படுத்தவும்:

சோப் மற்றும் தண்ணீர் பயன்படுத்தி பாட்டிலை நன்றாக சுத்தம் செய்யுங்கள். இப்படிச் செய்வதால் பாட்டிலில் இருக்கும் கசடுகள் நீங்கிவிடும். மேலும் பாட்டிலில் சோப் நுரை போகும் வரை நன்றாக அலச வேண்டும். மணி பிளாண்ட்டை வைப்பதற்கு முன் பாட்டிலை ஈரமில்லாமல் நன்றாக காய வைக்கவும்.

எப்படி தேர்வு செய்வது?

பாட்டிலில் வளர்ப்பதற்காக ஏற்கனவே வளர்ந்து வரும் மணி பிளாண்டில் உள்ள ஆரோக்கியமான தண்டுகளை வெட்ட வேண்டும். இந்த தண்டில் குறைந்தது இரண்டு இலைகளாவது இருக்க வேண்டும். இலையின் கணுக்களுக்கு கீழ் உள தண்டை சிறிதளவு வெட்டிவிடுங்கள். அப்போது வேர் பிடித்து வளர்வதற்கு வசதியாக இருக்கும்.

தேவையான தண்ணீர் :

சுத்தமான தண்ணீரை பாட்டிலில் நிரப்புங்கள். அதற்காக பாட்டில் முழுதும் தண்ணீர் நிரப்பாமல், செடி வைப்பதற்கு வசதியாக ஒன்று அல்லது இரண்டு இன்ச் இடம் இருக்க வேண்டும். குழாய் தண்ணீரை பயன்படுத்தினால் அதிலுள்ள உப்பு மற்றும் தாதுக்கள் மணி பிளாண்ட்டை வளர விடாமல் அழித்துவிடும். ஆகவே எப்போதும் மினரல் வாட்டர் பயன்படுத்துங்கள்.

எப்படி பாட்டிலில் வைப்பது?

பாட்டில் நன்றாக காய்ந்ததும் நடுப்பகுதி வரை தண்ணீர் நிரப்பி, மணி பிளாண்ட்டின் தண்டுகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி இருக்குமாறும் இலைகள் மட்டும் பாட்டிலின் வெளியே தெரியுமாறும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

பாட்டிலை ஏங்கே வைப்பது?

வெதுவெதுப்பும் மறைமுகமாக சூரிய ஒளி படும் இடத்திலும் பாட்டிலை வைக்க வேண்டும். சூரிய ஒளி தண்ணீர் பாட்டிலில் நேரடியாக பட்டால் பாசிகள் படர்ந்துவிடும். ஆகவே சூரிய ஒளி நேரடியாக படும் இடத்தில் ஒருபோதும் மணி பிளாண்ட்டை வைக்காதீர்கள்.

தண்ணீரை எப்போது மாற்ற வேண்டும்?

1-2 வாரத்திற்கு ஒருமுறை தண்ணீரை மாற்ற வேண்டும். அப்போதுதான் மணி பிளாண்ட்டிற்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். சுத்தமான தண்ணீர் சேர்ப்பதற்கு முன் பாசிகள் ஏதாவது இருந்தால் அதை சுத்தமாக அலசிவிடுங்கள்.

வேர்களின் ஆரோக்கியம் முக்கியம் :

மணி பிளாண்ட் நன்றாக வளர வேண்டுமென்றால் அதன் வேர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான வேர்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். ஒருவேளை வேர்களில் பச்சை அல்லது கருப்பு திட்டுகள் இருந்தாலோ பாட்டிலில் துர்வாடை வந்தாலோ, மணி பிளாண்ட் அழுகியிருக்கிறது என்று அர்த்தம்.

செடிகளை கத்தரித்தல் :

இலைகள் காய்ந்திருந்தாலோ அல்லது மஞ்சள் நிறத்தில் இருந்தாலோ அதை வெட்டிவிடுங்கள். சில குறிப்பிட்ட தண்டுகளிலிருந்து மோசமான இலைகள் வளர்ந்தால், செடியை வெளியே எடுத்து அந்தக் குறிப்பிட்ட தண்டுகளை மட்டும் வெட்டிவிடுங்கள்.

வளர்வதற்கு உதவி செய்யுங்கள் :

நீங்கள் வைத்துள்ள மணி பிளாண்ட் நன்றால் வளர்ந்தால், அதன் கொடிகள் உங்கள் மேஜை மீது படர ஆரம்பிக்கும். ஆகையால் சிறு கயிறு அல்லது வயரை பயன்படுத்தி அதன் தண்டுகளை இறுக்கமாக சேர்த்து கட்டுவதால் கொடிகள் சுதந்திரமாக படரும்.

Related Posts

Leave a Comment