திருமந்திரம் – பாடல்1790: ஏழாம் தந்திரம் – 8

by Lifestyle Editor

சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

நானிது தானென நின்றில னாடோறு
மூனிது தானுயிர் போலுணர் வானுளன்
வானிரு மாமுகிற் போற்பொழி வானுள
னானிது வம்பர நாதனு மாமே.

விளக்கம்:

பாடல் #1789 இல் உள்ளபடி நான் இறைவன் என்று எண்ணுகின்ற எண்ணத்திலேயே இருக்காமல் தினந் தோறும் தனது உடலாக இருப்பதே இறைவன் தான் என்று எண்ணுகின்றான். அவன் இறைவன் அருளால் தனக்குள் உணர்த்தப் பட்ட இறை தர்மத்தை முறைப்படி கடைபிடிக்கும் போது, தனது உயிர் போல் இருக்கின்றவன் இறைவனே என்பதை உணர்ந்து கொள்கின்றான். அப்போது வானத்தில் இருக்கின்ற மாபெரும் மேகக் கூட்டம் மழையாகப் பொழிவதைப் போல தமது பேரருளை மழையாகப் பொழிபவன் தனக்குள்ளே இருக்கின்றான் என்பதை உணர்ந்து கொள்கின்றான். அதன் பிறகு தாமாக இருக்கின்ற இறைவனே ஆகாயத்தில் அனைத்திற்கும் தலைவனாகவும் இருக்கின்றான் என்கின்ற நிலையை அடைந்து விடுகின்றான்.

Related Posts

Leave a Comment