திருமந்திரம் – பாடல் 1796: ஏழாம் தந்திரம் – 9

by Editor News

திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

தானே யறியும் வினைக ளறிந்தபின்
நானே யறுதியென் னந்தி யறியுங்கோ
னூனே யுருக்கி யுணர்வை யுணர்ந்தபின்
தேனே யனைய நந்திதேவர் பிரானே.

விளக்கம்:

இறைவன் உள்ளுக்குள் இருந்து உணர்த்துகின்ற அறிவின் துணையால் அடியவர்கள் தாமே அறிந்து கொள்ளக் கூடிய தங்களின் வினைகளையும் அவற்றை நீக்குகின்ற வழிகளையும் அறிந்து கொண்ட பிறகு, அவர்களின் அறிவுக்கு அவர்களே வகுத்துக் கொண்ட வரை முறைப்படி இருப்பதை அவர்களுக்குள் இருக்கின்ற குருநாதராகிய இறைவன் அறிவான். இப்படி வரை முறைப்படி வாழ்வதினால் தங்களின் வினைகள் அழிந்து போகும் போது அவர்களுக்குள் இருந்து பேரன்பானது வெளிப்படுகின்றது. அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனின் மேல் கொண்ட பேரன்பினால் தமது உடலையும் உருக்கிக் கொள்ளுகின்ற அளவிற்கு உருகின்ற மனதின் உணர்ச்சி நிலையை உண்மையாக உணர்ந்த பிறகு எவ்வளவு அருந்தினாலும் தெகிட்டாத தேனைப் போன்று அவர்களுக்கு துணையாக இருப்பவன் குருநாதனாகவும் தேவர்களுக்கெல்லாம் தலைவனாகவும் இருக்கின்ற இறைவன்.

Related Posts

Leave a Comment