திருமந்திரம் – பாடல் 1795: ஏழாம் தந்திரம் – 9

by Lifestyle Editor

திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

தேர்ந்தறி யாமையின் காலங்கள் போயின
பேர்ந்தறி வானெங்கள் பிஞ்ஞக னெம்மிறை
யார்ந்தறி வாரறி வேதுணை யாமெனச்
சார்ந்தறி வான்பெருந் தன்மைவல் லானே.

விளக்கம்:

தமக்குள்ளே இருக்கின்ற இறைவனின் திருவருளால் பிறவி இல்லாத நிலையை அடைய முடியும் என்பதை அறிந்து கொள்ளாத தன்மையினால் உயிர்களின் ஒரு பிறவியின் காலங்கள் வீணாக கழிந்து போகின்றது. இப்படி வீணாக வாழ்நாளை கழிக்காமல் இறைவனை தேடுகின்ற உயிர்கள் எது என்பதை பிரித்து அறிகின்றவன் பிறை நிலாவையும் கங்கையையும் தலையில் சடையாகச் சூடிக்கொண்டு பிறவி இல்லாத நிலையை அருளும் எமது தலைவனாகிய இறைவன் ஆவான். அவனை தமக்குள்ளே ஆராய்ந்து அறிகின்றவர்களுக்கு உண்மை அறிவாக எப்போதும் துணையாக இருப்பான். அந்த இறைவன் உள்ளுக்குள் இருந்து உணர்த்துகின்ற அறிவுத் துணையை எப்போதும் சார்ந்து இருந்து அனைத்தையும் அறிந்து கொள்ளுகின்ற அடியவர்கள் மிகப் பெரிய தன்மைகளை அடையும் வல்லமை பெற்றவர்களாக இருப்பார்கள்.

Related Posts

Leave a Comment