கர்ப்பகால இரத்த சோகைக்கான காரணங்கள் மற்றும் தடுக்கும் வழிகள்….

by Lifestyle Editor

ஒவ்வொருவருடைய கர்ப்ப காலமும் வித்தியாசமானதாகவே இருக்கிறது. இந்நிலையில் அவர்களுக்கு ஏற்படும் உடல் மாற்றங்களும், கர்ப்பகால அறிகுறிகளும் நபருக்கு நபர் மாறுபடலாம். ஆனால் இரத்த சோகை போன்ற ஒரு சில பொதுவான பிரச்சனையை பல கர்ப்பிணிகளும் சந்திக்கின்றனர். இதை எதிர்கொள்ளும் பெண்கள் தங்கள் கர்ப்ப காலம் முழுவதும் கவனமாக இருக்க வேண்டும், குறிப்பாக கர்ப்பத்தின் இரண்டாம் கட்டத்தில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.

உடலில் உள்ள அனைத்து உள் உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை கொண்டு செல்வதில் இரத்த சிவப்பணுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறையும் பொழுது இரத்த சோகை ஏற்படுகிறது. இதன் ஆரம்ப நிலையில் சோர்வு போன்ற அறிகுறிகளை உணரலாம். ஆரம்பத்திலேயே இதற்கான சிகிச்சையை எடுத்துக்கொண்டால் இரத்த சோகை தீவிரமடைவதை தடுக்கலாம். இதன் விளைவுகளை தடுக்க சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

கர்ப்பகால இரத்த சோகையினால் குறை பிரசவம், குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பது போன்ற நிலைகள் ஏற்படலாம். இதன் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் இது போன்ற அபாயங்களை தடுக்கலாம். இதற்கான சில குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.

கர்ப்பகால இரத்த சோகைக்கான காரணங்கள் :

கர்ப்ப காலத்தில் ஒட்டுமொத்த இரத்த அளவுகளும் அதிகரிக்கின்றன. இருப்பினும் இரத்த சிவப்பணுக்களின் அளவுகள் அதிகரிப்பதை விட பிளாஸ்மா எனும் திரவம் கூடுதலாக அதிகரிக்கிறது. இதன் விளைவாக ஒட்டுமொத்த இரத்த அளவுகளில் சிவப்பு இரத்த அணுக்களின் சதவீதம் குறைவாகவே இருக்கும். இது இரத்த பரிசோதனையில் பிரதிபலிக்கிறது.

உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதும் இரத்த சோகைக்கான மற்றொரு பொதுவான காரணம் ஆகும். இதனால் ஆக்ஸிஜனை சுமக்கும் கூறுகளான ஹீமோகுளோபினின் உற்பத்தியும் குறைகிறது.
இருப்பினும் குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்தை வழங்குவதற்கு உடல் கடினமாக உழைத்து இரத்தத்தின் அளவை 45 சதவிகிதம் அதிகரித்தாலும், உடலியல் இரத்த சோகை ஏற்படலாம். புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஏற்படும் மிகவும் பொதுவான இரத்த சோகைகளில் இதுவும் ஒன்றாகும்.

ஃபோலேட் மற்றும் வைட்டமின் B12 குறைபாடு காரணமாகவும் கர்ப்ப காலத்தில் இரத்த சோகை ஏற்படலாம். நீரில் கரையக்கூடிய வைட்டமினான ஃபோலிக் ஆசிட் பற்றாக்குறையினால் ஃபோலேட் குறைபாடு ஏற்படலாம். குழந்தையின் நரம்புக் குழாய் குறைபாடுகள், மூளை பிரச்சனைகள் போன்ற பலவற்றை தடுக்க ஃபோலிக் ஆசிட் உதவுகிறது. வைட்டமின் B12 உடலில் சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க பயன்படுகிறது. இது செறிவூட்டப்பட்ட உணவுகள், இறைச்சி, மீன், கோழி மற்றும் முட்டை உள்ளிட்ட உணவுகளில் காணப்படுகிறது.

கர்ப்ப கால இரத்த சோகை தடுக்கும் வழிகள் :

இரும்புச்சத்து, ஃபோலிக் ஆசிட் உட்பட பெரும்பாலான நுண்ணூட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கும் வைட்டமின் மாத்திரைகளை கர்ப்பம் தரிக்க முயற்சி செய்பவர்களும், கர்பிணிகளும் மருத்துவர் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ளலாம்.

இரும்புச்சத்து குறைபாடு காரணமாக இரத்த சோகை ஏற்பட்டால் மேற்கூறிய வைட்டமின்களுடன் கூடுதலாக இரும்புச் சத்துக்கான மாத்திரைகளையும் மருத்துவர் பரிந்துரை செய்யலாம்.

கோழி, மீன், ஆட்டு ஈரல், பீன்ஸ், நட்ஸ், விதைகள், அடர் நிற கீரைகள், செறிவூட்டப்பட்ட தானியங்கள், முட்டை, பழங்கள், குறிப்பாக வாழைப்பழங்கள் மற்றும் முலாம்பழம் போன்ற உணவுகளில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. இது போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இரத்த சோகையை தடுக்கலாம்.

Related Posts

Leave a Comment