இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை

by Lankan Editor

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடந்து வரும் போர் உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பல உலக நாடுகளும், இஸ்ரேலில் உள்ள தங்கள் குடிமக்களை, தங்கள் நாட்டிற்கு மீட்டு சென்று வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று அக்டோபர் 14ம் தேதி அன்று தென் கொரிய இராணுவ போக்குவரத்து விமானம் மூலம் ஐந்து சிங்கப்பூரர்கள் இஸ்ரேலில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

தென் கொரிய வெளியுறவு அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட கூட்டு அறிவிப்பின்படி, தென்கொரியாவின் இராணுவ விமானம், டெல் அவிவ் விமான நிலையத்தில் இருந்து 220 பேரை நேற்று சனிக்கிழமை அன்று மாலை ஜியோங்கி மாகாணத்தில் உள்ள சியோல் விமானத் தளத்திற்கு கொண்டு வந்ததாக கொரியன் ஹெரால்ட் மற்றும் என்ஹெச்கே செய்தி வெளியிட்டுள்ளன.

பத்திரமாக மீட்டு வரப்பட்ட இந்த 220 பேரில், ஐந்து பேர் சிங்கப்பூரர்கள், மேலும் 51 ஜப்பானியர்கள் மற்றும் 163 தென் கொரியர்கள் அடங்குவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. தென் கொரிய நாட்டின் விமானப்படையின் KC-330 Cygnus என்ற போக்குவரத்து விமானம் இந்த மீட்பு பணியில் பயன்படுத்தப்பட்டதாக கொரியன் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விமானத்தில் ஒரே நேரத்தில் 230 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.

 

இது தென் கொரியாவில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் இஸ்ரேலுக்கு புறப்பட்டு, டெல் அவிவில் உள்ள இஸ்ரேலின் முதன்மை விமான நிலையமான பென் குரியன் விமான நிலையத்தை உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை மதியம் சென்றடைந்தது. மேலும் இந்த விமானம் நேற்று சனிக்கிழமை இஸ்ரேலில் இருந்து புறப்பட்டு, மாலையில் சியோலுக்கு அருகிலுள்ள விமான நிலையத்தை வந்தடைந்தது.

மனிதாபிமான கண்ணோட்டத்தில் ஜப்பானிய பிரஜைகளையும் இஸ்ரேலில் இருந்து வெளியேற்றுவதற்கு ஒத்துழைத்ததாக தென் கொரிய அமைச்சகம் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கொரிய குடியரசின் (ROK) குடிமக்களை வெளியேற்றுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இராணுவ போக்குவரத்து விமானத்தில் இஸ்ரேலின் டெல் அவிவில் இருந்து “ஐந்து சிங்கப்பூரர்கள்” பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக வெளியுறவு அமைச்சகத்தின் (MFA) செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

தென்கொரியாவின் இந்த நடவடிக்கைக்கு பெரும் நன்றிகளை தெரிவிப்பதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment