தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது ஏன் …

by Lifestyle Editor

சட்டப்பேரவையிலிருந்து வெளியேறியது ஏன் என விளக்கமளித்து ஆங்கில நாளிதலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டியளித்துள்ளார்.

திமுக அரசு உடனான அனுபவம் குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், கோவை கார் குண்டு வெடிப்பு, கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மீதான தாக்குதல், தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலர் கொலை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே, பாகிஸ்தானில் இருந்து தமிழ்நாட்டிற்கு போதைப் பொருட்கள், ஆயுதங்கள் கடத்தப்படுவதாக மத்திய உளவுத்துறை எச்சரித்ததாகவும், தற்போது இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் சூழலில், தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று எப்படி கூற முடியும் என்றும் வினவியுள்ளார்.

மேலும், திராவிட மாடல் என்ற ஒன்றே கிடையாது என்றும், ஒரே நாடு ஒரே பாரதம் என்ற முழக்கத்திற்கு எதிரானது திராவிட மாடல் வாசகம். சுதந்திர போராட்டத்தை குறைத்து மதிப்பிடுவதே திராவிட மாடல் என்ற முழக்கம் என்றும் கூறியுள்ளார்.

இதன்காரணமாகவே, சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த சில பகுதிகளை நீக்கிவிட்டு வாசித்ததாகக் கூறினார். தனது உரைக்கு பிறகு, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பதற்காக அவையில் காத்திருந்ததாகவும், ஆனால், சபாநாயகருடன் ரகசியமாக பேசி முதலமைச்சர் தனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாகவே, சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இருந்து பாதியில் வெளியேறியதாக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கமளித்துள்ளார்.

பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு எதிராக சித்தா பல்கலைக்கழக மசோதா உள்ளதாகவும், பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என்பதால், அந்த மசோதாவை நிறுத்தி வைத்துள்ளதாகவும் ஆளுநர் கூறியுள்ளார்.

மேலும், ஆளுநர் மாளிகையில் நிதி செலவினங்களில் விதிமீறல் இல்லை என்றும், முதலமைச்சர் மீது தனிப்பட்ட முறையில் நல்ல மரியாதையை வைத்துள்ளதாகவும் ஆளுநர் ஆர்.என்ரவி கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment