சென்செக்ஸ் 398 புள்ளிகள் வீழ்ச்சி …

by Lifestyle Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 398 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

கடன் பரஸ்பர நிதிகளில் மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு குறுகிய கால மூலதன ஆதாய வரி விதிக்கப்படலாம் என்ற தகவல், முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், கோடக் மகிந்திரா வங்கி மற்றும் இன்போசிஸ் உள்பட மொத்தம் 5 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. விப்ரோ நிறுவன பங்கின் விலையில் மாற்றம் இல்லை. அதேவேளையில், பஜாஜ் பின்சர்வ் மற்றும் பஜாஜ் பைனான்ஸ் உள்பட மொத்தம் 24 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,037 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,453 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 140 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.254.50 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.59 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 398.18 புள்ளிகள் குறைந்து 57527.10 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 131.85 புள்ளிகள் சரிவு கண்டு 16,945.05 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment