தினம் ஒரு திருமந்திரம் – திருமந்திரம் – பாடல் 1676 : ஆறாம் தந்திரம் – 12.

by Lifestyle Editor

முன்னுரை: சிவ வேடம்

இறைவன் உருவமோ குணமோ தன்மையோ இல்லாதவன். ஆகவே அவனுக்கு என்று எந்த வேடமும் கிடையாது. உண்மையான அடியவர்கள் இறைவனை உணரும் பொழுது எந்த வேடத்தில் இருந்தார்களோ அதுவே இறைவனின் வேடமாக ஆகின்றது. அந்த அடியவர்களின் வேடத்தையே இறைவனாக பாவித்து பல காலமாக வணங்கிக் கொண்டு வருகின்றோம். உதாரணம் கண்ணப்பர் போன்ற பல நாயன்மார்கள்.

திருமந்திரம் – பாடல் #1676: ஆறாம் தந்திரம் – 12. சிவ வேடம் (உண்மையான அடியவரின் வேடமே சிவ வேடம் ஆதல்)

அருளா லரனுக் கடிமை யதாகிப்
பொருளாந் தனதுடல் பொற்பதி நாடி
யிருளான தின்றி யிருஞ்செய லற்றோ
தெருளா மடிமை சிவவேடத் தாரே.

விளக்கம்:

இறைவனது திருவருளால் இறைவனுக்கு தானாகவே அடிமையாக தாம் ஆகி பொருளாக இருக்கின்ற தமது உடலே பொன் அம்பலமாக மாறி அதில் நடனமாடும் இறைவனை தமக்குள் தேடி அடைந்து ஆணவம் கன்மம் மாயை என்று இருக்கின்ற மும்மலங்கள் இல்லாமலும் நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான செயல்களும் இல்லாமலும் ஆகி தாம் பெற்ற ஞானத்தில் தெளிவு அடைந்த உண்மையான அடியவர்களே இறைவனது வேடத்தை கொண்டவர்கள் ஆகும்.

Related Posts

Leave a Comment