தேவையற்ற கோபத்திற்கு தீர்வு தரும் தியானம்

by Lifestyle Editor

இன்றைய காலச்சூழலில் நம்மில் பலர் பலவிதமான மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகிறோம். அநாவசியமான மன அழுத்தங்களில் இருந்து விடுபட அமைதியான தியானம் அத்தியாவசியமான ஒன்றாகும். தியானத்தில் கிடைக்கும் ஓய்வு ஆழ்ந்து தூங்குவதில் பெறும் ஓய்வினை விட ஆழமானது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மனம் கிளர்ச்சிகளிலிருந்து விடுபட்டு அமைதியாகவும், சாந்தமாகவும் இருக்கும் நிலையையே தியானம் என்கிறோம். அமைதியான சூழலில் மெல்லிய காற்றின் வருடலில் கண்களை மூடி மனதை அமைதிபடுத்தி ஒருநிலையில் இருந்தால் தான் தியானம் முழுமையடையும். இதற்கு மன சுத்தமே முதன்மையான ஒன்றாக கருதப்படுகிறது. அமைதியான மனம், நல்ல கவனிப்புத் திறன், கருத்துகளில் தெளிவு, தகவல் தொடர்பு மேம்பாடு, திறன்கள் மற்றும் திறமைகள் மேம்படுதல், இளைப்பாறுதல், புத்துணர்வு பெறுதல் இவையணைத்தும் ஒழுங்கான சீரான தியானத்தின் மூலம் கிடைக்கப் பெறும் இயற்கையான விளைவுகளாகும்.

தூக்கமின்மை, தேவையற்ற கோபம், இயலாநிலை, தனிமை போன்ற பிரச்சினைகளுக்கு தியானம் சிறந்த தீர்வாக உள்ளது. ஆழ்ந்த தியானத்திற்கு பின் தெளிவு பெற்றதாகக் கூறப்படுவதற்கு காரணம் மன அழுத்தத்துடன் தொடர்புடைய சைட்டோகின் எனும் மூலக்கூறுகளின் செயல்பாடுகளை செயல் இழக்கச் செய்வதே ஆகும். இதனை 2017-ம் ஆண்டு தேசிய சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஆய்வும் உறுதி செய்கிறது. மேலும் உடல் ரீதியாக உடல் வலி, தலை வலி போன்ற பிரச்சினைகள் நீங்கும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தியானத்தின் மூலம் மனதின் சுயக்கட்டுப்பாடு அதிகரித்து, மன பதற்றம், பயம், மன சோர்வு, திடீர் மன அழுத்தம் போன்றவற்றில் இருந்து விடுபட்டு மூளை சுறுசுறுப்படையும். குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் தியானம் சிறந்தது என்று கூறப்படுகிறது. போர் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் இழப்பை சமாளிக்கவும், அவர்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகளால் எதிர்மறையாக பாதிக்கப்படுவதை தவிர்க்கவும் தியானம் உதவும்.

உலகம் முழுவதும் தற்போது புதிய ஆண்டு குறித்த சிந்தை ஓடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு புத்தாண்டிலும் மக்கள் தங்களுக்குள் சமாதானத்தை ஏற்படுத்தி கொண்டு தங்கள் சமூகத்திலும், நாட்டிலும் அமைதியான வாழ்வியலை உருவாக்கி கொள்ள விரும்புகின்றனர். மன நிலையையும், உடல் நிலையையும் சீராக்கி வாழ் நிலையை மகிழ்ச்சியாய் எதிர்கொள்ள உதவும் தியானத்தின் பயன்களை உலக நாடுகளுக்கு வலியுறுத்தும் விதமாகவும், புத்தாண்டினை புத்துணர்ச்சியோடு தொடங்க வேண்டும் என்ற நோக்கத்திலும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31-ந் தேதி (இன்று) உலக அமைதி தியான தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Related Posts

Leave a Comment