குழந்தைகள் தாத்தா, பாட்டியுடன் சேர்ந்து வளர்வது நல்லது.. ஏன் தெரியுமா..?

by Lifestyle Editor

பழங்காலத்தில் பெரும்பாலும் அனைவருமே கூட்டுக் குடும்பங்களாக வசித்து வந்தார்கள். ஆனால் தற்போது பலர் கணவன், மனைவி மற்றும் பிள்ளைகள் என்று ஒரு சிறிய குடும்பத்தில் வாழ்வதை விரும்புகின்றனர். இதனால் பிள்ளைகளுக்கு தாத்தா பாட்டியின் அரவணைப்பு முழுமையாக கிடைக்காமல் போகிறது. ஆகவே இந்த பதிவில் பேரப்பிள்ளைகளுக்கு தாத்தா பாட்டியின் முக்கியத்துவம் என்ன என்பதை புரிந்து கொள்ளலாம்.

பொதுவாக தாத்தா பாட்டிகள் வாழ்ந்து கொண்டிருக்கும் வீடு ஒரு சிறிய லைப்ரரி போல தான். அவர்களுடைய சொந்த அனுபவங்களில் இருந்து பல்வேறு விதமான கதைகளை கொண்டிருப்பார்கள். அவர்கள் கடந்த காலம் மற்றும் எதிர்காலத்திற்கு இடையே ஒரு பாலம் போல செயல்படுவார்கள். அவர்களுடைய கதைகள் மூலமாக பேரப்பிள்ளைகளுக்கு மதிப்பு மிகுந்த வாழ்க்கை பாடங்களை கற்றுத் தருவார்கள்.

தாத்தா பாட்டிகள் எப்பொழுதும் பேரப்பிள்ளைகள் மீது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத அன்பை செலுத்தக் கூடியவர்கள். அவர்கள் குழந்தைகளை அன்பாகவும், அரவணைப்பாகவும் பாதுகாப்பார்கள். தாத்தா பாட்டிகள் பேரப்பிள்ளைகளுக்கு அன்பையும் புரிதலையும் அள்ளி அள்ளி வழங்கக் கூடியவர்கள்.

குடும்ப வரலாற்றை நன்கு அறிந்த தாத்தா பாட்டிகள் தலைமுறைகளுக்கு இடையே உள்ள இடைவெளியை கதைகள் மூலமாக நிரப்பக் கூடியவர்கள். இதன் மூலமாக பிள்ளைகள் அவர்களுடைய வேர்கள், பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரத்தை கற்றுக் கொள்வார்கள்.

பிரச்சனைகளிலிருந்து மீள்வது, வலிமை மற்றும் விடாமுயற்சி போன்றவற்றை உருவகப்படுத்தக் கூடியவர்கள் தாத்தா பாட்டிகள். இவர்களுடைய பயணம் பேரப்பிள்ளைகளுக்கு ஒரு சாலை வரைபடம் போல திகழ்கிறது. எப்பேர்ப்பட்ட தடைகள் வந்தாலும் அவற்றை எப்படி சமாளிப்பது, கனவுகளை எப்படி அடைவது போன்றவற்றை கற்றுக் கொள்வதற்கு இவர்கள் உதவியாக இருப்பார்கள்.

இன்றைய நவீன உலகில் பெற்றோர்களுக்கு பிள்ளைகளுடன் போதுமான அளவு நேரத்தை செலவிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்த குறையை தாத்தா பாட்டிகள் தீர்த்து வைப்பார்கள். பேரப்பிள்ளைகளுடன் வாக்கிங் செல்வது, அவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்பது, பாரம்பரிய உணவுகளை ஒன்றாக சமைத்து சாப்பிடுவது, அவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்வது மற்றும் பல போன்ற வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளை தரக்கூடியவர்கள் தாத்தா பாட்டிகள்.

விளையாட்டாக இருந்தாலும் சரி, படிப்பாக இருந்தாலும் சரி கடினமான சூழ்நிலைகளில் தாத்தா பாட்டிகள் எப்பொழுதுமே அவர்களுடைய பேரப்பிள்ளைகளுக்காக இருப்பார்கள். பிள்ளைகளின் தன்னம்பிக்கையை அதிகரித்து வாழ்க்கையின் மேடு பள்ளங்களை எப்படி சமாளிப்பது என்று சொல்லிக் கொடுப்பதற்கு வீட்டில் நிச்சயமாக தாத்தா பாட்டிகள் வேண்டும்.

ரகசியமான குடும்ப ரெசிபிகள் முதல் விடுமுறை பாரம்பரியங்கள் வரை தாத்தா பாட்டிகளிடம் ஒளிவூட்டும் பாரம்பரிய தீச்சுடர் எப்பொழுதும் இருக்கும். ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய பாரம்பரியங்கள் மற்றும் வழக்கங்களை தாத்தா பாட்டிகளை விட யாரால் சொல்லித் தர முடியும்.

Related Posts

Leave a Comment