பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்பு..

by Lifestyle Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 721 புள்ளிகள் உயர்ந்தது.

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று காலையில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறிய சரிவுடன் தொடங்கியது. இருப்பினும், முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் பின்னர் பங்கு வர்த்தகம் எழுச்சி கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் இண்டஸ்இந்த் வங்கி உள்பட மொத்தம் 26 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், நெஸ்லே இந்தியா மற்றும் கோடக்மகிந்திரா வங்கி உள்பட மொத்தம் 4 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,874 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 762 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 132 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.277.91 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று ஒட்டு மொத்த அளவில் ரூ.5.62 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 721.13 புள்ளிகள் உயர்ந்து 60,566.42 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 207.80 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,014.60 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment