தலைக்கு எண்ணெய் வைத்தால் பொடுகு அதிகரிக்குமா..?

by Lifestyle Editor

பல வாரங்களுக்கு மேல் பொடுகு நீங்கவில்லை என்றாலோ அல்லது அதிகரித்துக் கொண்டே வந்தாலோ, மருத்துவரை அணுகி, என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளலாம்.

பொடுகினால் பாதிக்கப்படாதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு அனைவருமே ஏதோ ஒரு சமயம் தீவிரமான பொடுகு தொல்லையால் அவதிப்பட்டு இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், முடி உதிர்வுக்கு முக்கியமான காரணமாக பொடுகுதான் கூறப்படுகிறது. பொடுகு போக வேண்டுமென்றால் நிறைய எண்ணெய் தடவ வேண்டும் என்று பொதுவாக கூறப்படுவது உண்டு.

தலைக்கு எண்ணெய் தடவுவது ஆரோக்கியமானது தான் என்றாலும் அது பொடுகுக்கு தீர்வாக அமையாது. சரி எண்ணெய் தடவினால் பொடுகு தீருமா அல்லது எந்த மாதிரியான எண்ணெய் தடவ வேண்டும் என்பது பற்றி ஜூனோயிஸ்க் கிளினிக்கின் காஸ்மட்டாலஜிஸ்ட் கிரண் பட் பகிர்ந்தவை இங்கே.

பொடுகு தொல்லை இருக்கும் பொழுது ஒரு சிலர் தலைக்கு எண்ணெய் தடவுவார்கள், ஒரு சிலர் தடவமாட்டார்கள். எண்ணெய் தடவினால் மண்டையில் பொடுகு அப்படியே ஒட்டிக்கொள்ளும், அதுவே அதிகமாகும் காரணமாக மாறும் என்று சிலர் கூறுவார்கள், ஒரு சிலர் பொடுகு இருக்கும்பொழுது எண்ணெய் தடவாமல் போனால் மண்டைப் பகுதி மிகவும் வறண்டு போய் அரிப்பு எடுக்கத் துவங்கும். அது மட்டுமில்லாமல் பொடுகு இருக்கும் பொழுது எண்ணெய் தடவினால் அது தலைப்பகுதியில் இருக்கும் இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் ஆகியவற்றுடன் கலந்து பொடுகு பாதிப்பை அதிகரிக்கும். எண்ணெய் வைக்கலாமா வேண்டாமா என்று இரண்டு வகையான கருத்துகள் நிலவுகின்றன.

சரி, உண்மையிலேயே எண்ணெய் தடவுவதால் பொடுகு தொல்லை அதிகரிக்குமா என்று கேட்டால் இல்லை என்றுதான் கூற வேண்டும். தினமும் எண்ணெய் தடவ வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால் வாரத்தில் ஒரு சில நாட்களுக்காவது தலைக்கு எண்ணெய் பூசிக்கொள்ளலாம். அது மட்டுமல்லாமல், எல்லா வகையான எண்ணெய்யும் பொடுகுக்கு தீர்வாக அமையாது. எனவே பொடுகு தொல்லை இருப்பவர்கள் சரியான எண்ணெய் தொல்லை இருப்பவர்கள் சரியான எண்ணெய்களை தேர்ந்தெடுத்து கலந்து தலைக்கு தடவி வர வேண்டும். இவ்வாறு எண்ணெய் தடவினால் மண்டைப் பகுதி வறண்டு போகாமல் இருக்கும், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இவை பொடுகு தொல்லையை குறைக்கும்.

பொடுகு ஏற்படுவதற்குக் காரணம் என்ன மற்றும் அறிகுறிகள் :

தலைமுடி வறட்சி, கெமிக்கல் பயன்பாடு, ரசாயனங்கள் நிறைந்த ஷாம்பு பயன்படுத்துவது, தலைமுடியை சரியாக பராமரிக்காமல் இருப்பது, உடலில் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை பொடுகுக்கு காரணமாக அமைகிறது. இதனால், தலைப்பகுதியில் அரிப்பு ஏற்பட்டு, வெள்ளை துகள்களாக பொடுகு தோன்றும். சில நேரங்களில் மைல்டாக இருந்தாலும், பல நேரத்தில் மண்டைப்பகுதி லேசாக வீக்கம் அடையும். தீவிரமான பொடுகு அல்லது நாட்பட்ட பொடுகுத் தொல்லை இருந்தால், அது செப்ஹோரிக் டெர்மாடிடிஸ் என்ற ஒரு சரும பாதிப்பை ஏற்படுத்தும். இது, ஹார்மோன் மாற்றங்களால் உண்டாகிறது.

* தலைப்பகுதி, நெற்றி, புருவம், மீசை, தாடி மற்றும் தோள் பகுதிகளில் வெள்ளை நிறம்

* பிளேக்ஸ் காணப்படும்.

* தலைப்பகுதி முழுவதும் அரிப்பு எடுக்கும்

* அரிப்பினால் சொரியும் போது, புண்ணாகி, வீக்கமடையும்

பல வாரங்களுக்கு மேல் பொடுகு நீங்கவில்லை என்றாலோ அல்லது அதிகரித்துக் கொண்டே வந்தாலோ, மருத்துவரை அணுகி, என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளலாம். பொடுகு மைல்டாக இருக்கும் போது, தினசரி ஷாம்பு அல்லது சீயக்காய் தேய்த்து தலைக்கு குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை நீங்கி விடும். நாட்பட்ட பொடுகுக்கு மருந்தங்களில் கிடைக்கும் ஷாம்பூவை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

அதே போல, ஒரு சில மூலிகை எண்ணைகள் பொடுகை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. அதையும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வாங்கிப் பயன்படுத்தலாம்.

Related Posts

Leave a Comment