பங்குச் சந்தைகளில் தொடரும் சரிவு… சென்செக்ஸ் 216 புள்ளிகள் வீழ்ச்சி..

by Lifestyle Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 216 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

இந்திய ரிசர்வ் வங்கி எதிர்பார்த்தது போலவே முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் உள்பட மொத்தம் 7 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், என்.டி.பி.சி. மற்றும் பஜாஜ் பின்சர்வ் உள்பட மொத்தம் 22 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. நெஸ்லே இந்தியா நிறுவன பங்கின் விலை மாற்றம் இல்லை.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,522 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,978 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 141 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.288.99 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று ஒட்டு மொத்த அளவில் ரூ.96 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 215.68 புள்ளிகள் சரிந்து 62,410.68 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 82.25 புள்ளிகள் குறைந்து 18,560.50 புள்ளிகளில் முடிவுற்றது .

Related Posts

Leave a Comment