FIFA உலகக்கோப்பை : தொடரில் இருந்து போட்டியை நடத்தும் கத்தார் வெளியேறியது …

by Lifestyle Editor

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் வேல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஈரான் அணி, கடைசிக் கட்டத்தில அடுத்தடுத்து கோல் அடித்து த்ரில் வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் கத்தார், போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது. செனகல் உடனான போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து, நாக் அவுட் சுற்று வாய்ப்பை இழந்தது!

வேல்ஸ் – ஈரான் அணி

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள வேல்ஸ் அணி, தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஈரான் அணியுடன் மோதியது.

போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், பரஸ்பரம் கோல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. 86-வது நிமிடத்தில் முரட்டு ஆட்டம் ஆடியதற்காக வேல்ஸ் கோல்கீப்பர் வெய்ன் ஹென்னெஸ்ஸி, சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அவருக்கு மாற்று கோல்கீப்பராக டேனி வார்டு களம் கண்டதால், நடுகள வீரர் ராம்சே வெளியேறும் நிலை ஏற்பட்டது. பின்னர், 10 வீரர்களுடன் ஆட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதால், வேல்ஸ் அணியின் தடுப்பு அரண் தகர்ந்தது. இதை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஈரான் வீரர், கடைசிக் கட்டத்தில் அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து அசத்தினர். முடிவில், 2-0 என்ற கோல்கணக்கில் ஈரான் அணி த்ரில் வெற்றி பெற்றது.

நெதர்லாந்து-ஈக்வடார்

நெதர்லாந்து-ஈக்வடார் அணிகள் மோதிய போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் போட்டி டிராவில் முடிந்தது, இந்த இரு அணிகளும் தலா 1 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் உள்ளன.

கத்தார்-செனகல்

இந்நிலையில் கத்தார்-செனகல் அணிகள் மோதிய மற்றொரு போட்டியில் உலகக்கோப்பையை நடத்தி வரும் கத்தார் அணி அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. சீரான இடைவெளியில் செனகல் அணி வீரர்கள் மொத்தமாக 3 கோல்கள் அடித்த நிலையில், கத்தார் அணி 78வது நிமிடத்தில் ஒரு கோல் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.

கத்தார் வெளியேற்றம்

இதையடுத்து போட்டிகளை நடத்தும் கத்தார் அணி , 2 போட்டிகளிலும் தோல்வியுற்று தொடரில் இருந்து வெளியேறிவிட்டது.

Related Posts

Leave a Comment