பங்குச் சந்தைகளை பந்தாடிய சர்வதேச நிலவரங்கள்… சென்செக்ஸ் 383 புள்ளிகள் வீழ்ச்சி

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 383 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

ரஷ்யா-உக்ரைன் இடையிலான பதற்றம் அதிகரிப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, தங்கம் விலை உயர்வு மற்றும் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று தள்ளியது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் கடும் வீழ்ச்சி கண்டது. இருப்பினும் வர்த்தகத்தின் பிற்பகுதியில் சிறிது உயர்வு கண்டது ஆனால் இறுதியில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பஜாஜ் பின்சர்வ் மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட மொத்தம் 10 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டாடா ஸ்டீல் மற்றும் டி.சி.எஸ். உள்பட மொத்தம் 20 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 691 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,665 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 85 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.254.81 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.2.58 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 382.91 புள்ளிகள் குறைந்து 57,300.68 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 114.45 புள்ளிகள் சரிவு கண்டு 17,092.20 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment