உட்துறை அலுவலகத்தின் அனுமதி மறுப்புக்கு எதிராக இளவரசர் ஹரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு!

by Column Editor

பிரித்தானியாவில் இருக்கும் போது பொலிஸ் பாதுகாப்பிற்காக தனிப்பட்ட முறையில் பணம் செலுத்துவதற்கு உட்துறை அலுவலகம் மறுத்ததற்கு எதிராக, இளவரசர் ஹரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள தனது தனிப்பட்ட பாதுகாப்புக் குழுவிற்கு வெளிநாட்டில் போதுமான அதிகார வரம்பு இல்லை அல்லது சசெக்ஸ் குடும்பத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கத் தேவையான பிரித்தானிய உளவுத்துறை தகவல்களை அணுக முடியாது என்று ஹரி வாதிடுகிறார்.

2020ஆம் ஆண்டில் அரசப் பணிகளில் இருந்து இளவரசர் ஹரி விலகிய பிறகு, மக்களின் வரிப்பணத்தில் பாதுகாப்பு அளிப்பது நிறுத்தப்பட்டது.

ஆனால், தனது தனிப்பட்ட பாதுகாவலர்களுக்கு வெளிநாட்டில் பாதுகாப்பு வரம்பு இல்லை என அவர் கருதுவதால், பிரித்தானியாவில் தனது பாதுகாப்புக்கு தனிப்பட்ட முறையில் பணம் செலுத்துவதற்கு இளவரசர் ஹரி விரும்புகிறார்.

ஆனால், அதற்கு பிரித்தானிய உட்துறை அலுவலகம் அனுமதி அளிக்க மறுத்து விட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அங்குள்ள உச்ச நீதிமன்றத்தில் இளவரசர் ஹரி வழக்கு தொடுத்துள்ளார்.

பிரித்தானியா எப்போதும் இளவரசர் ஹரியின் வீடாகவும், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பும் நாடாகவும் இருக்கும். பொலிஸ் பாதுகாப்பு இல்லாததால், தனிப்பட்ட ஆபத்து மிக அதிகம்’ என்று இளவரசரின் சட்டப் பிரதிநிதி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இளவரசர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இளவரசர் ஹரி செய்தது போல், பொது பதவியை விட்டு வெளியேறிய மற்றவர்கள் இன்னும் பொலிஸ் பாதுகாப்பைப் பெற்றுள்ளனர் என்ற உண்மையைக் குறிப்பிடுகிறது.

இந்த வழக்கு தொடர்ந்தால், அமைச்சர்களுக்கும் இளவரசர் ஹாரிக்கும் இடையே உயர்நீதிமன்றத்தில் முறுகல்நிலை ஏற்படும்.

இளவரசர் ஹரி தனது மகன் ஆர்ச்சியையும் குழந்தை மகள் லிலிபெட்டையும் அமெரிக்காவிலிருந்து வரவழைக்க விரும்புகிறார். ஆனால் அது மிகவும் ஆபத்தானது என்பதால் அவரும் அவரது குடும்பத்தினரும் தனது வீட்டிற்குத் திரும்ப முடியவில்லை என்று ஒரு சட்டப் பிரதிநிதி கூறினார்.

2021 ஆம் ஆண்டு கோடையில் லண்டனில் நடந்த ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து, அவர் ஒரு தொண்டு நிகழ்விலிருந்து வெளியேறியபோது அவரது காரை பாப்பராசி புகைப்படக் கலைஞர்கள் துரத்தியதால் அவரது பாதுகாப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டது. இளவரசர் ஹரிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் அவர் பிறந்தது முதலே இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

Related Posts

Leave a Comment